மீண்டும் சிலம்பம் கற்கும் சமந்தா
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பம் கற்றுக்கொண்டார் சமந்தா. அச்சமயம் அவர் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் இணையாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக அவர் சிலம்பம் கற்க வேண்டி இருந்தது.
இந்நிலையில் மீண்டும் சிலம்பம் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் சமந்தா. அண்மைய சில தினங்களாக மீண்டும் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பயிற்சியின்போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவை அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"சிலம்பப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாதது மனதில் ஒருவித ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவே மீண்டும் பயிற்சியைத் தொடங்க இதுவே தகுந்த நேரம் என்று தோன்றியது," எனக் கூறுகிறார் சமந்தா.
அருள்நிதி நடிக்கும் திகில் படம்
மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் தேர்ந்தவரான அருள்நிதி தற்போது, 'தேஜாவு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கி உள்ளார்.
இது மாறுபட்ட திகில் படமாக உருவாகி உள்ளதாம். மதுபாலா, ஸ்முருதி வெங்கட், மைம்கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
''ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறாள். அவளைக் கண்டு பிடிக்க கதாநாயகன் துப்பறிவதும் அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதை.
"இதில் அருள்நிதி, மதுபாலா ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாகவும், ஸ்முருதி வெங்கட் காணாமல் போகும் பெண்ணாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் படம் தயாராகிறது," என்கிறார் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன்.
முழுப் படப்பிடிப்பையும் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் சென்னையிலேயே நடத்தி உள்ளனர்.

