இயக்குநர் ஆக வேண்டும் எனும் தமது முப்பது ஆண்டுகால கனவு நிறைவேறி உள்ளது என்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நடிகர்களில் இவரும் ஒருவர். அதன் மூலம் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகப் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இவரைப் போல் சித்தார்த், கார்த்தி ஆகியோருக்கும் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் உண்டு.
"கடந்த 1990களின் தொடக்கம் முதல் எனக்கு இயக்குநர் ஆக வேண்டும் எனும் கனவு இருந்தது. படங்களை இயக்குவது மிகவும் கௌரவமான வேலை, மற்றவை அதற்குப் பிறகுதான் என்று என் மனதில் ஓர் எண்ணம் வலுவாகப் பதிந்து இருந்தது," என்கிறார் அரவிந்த்சாமி.
அண்மையில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியீடு கண்ட 'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள 'ரவுத்திரம்' என்ற பகுதியின் இயக்குநர் இவர்தான். இதுகுறித்து மணிரத்னம்தான் இவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
"மணி சார் 'நவரசா' படம் குறித்தும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும் முதலில் விவரித்தார். அதன் பிறகு அந்தப் படத்திலும் அதன் பின்னணியில் உள்ள முயற்சியிலும் நானும் பங்கேற்க இயலுமா என்று கேட்டார்.
"பதிலுக்கு நான் எந்த வகையில் பங்களிக்க வேண்டும் என்று கேட்டேன். இயக்குநராகவோ, நடிகராகவோ இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று மனதளவில் முடிவு செய்த பின்னர் நான் எழுப்பிய கேள்வி இது. ஆனால் எந்த வகை பங்களிப்பு என்பதை நானே தீர்மானிக்கலாம் என்றார் மணி. எனக்கு முழு சுதந்திரம் அளித்த பிறகு கொஞ்சம்கூட தயங்கவில்லை.
"இயக்குநராகப் பணியாற்றுகிறேன் என்றபோது அவர் மறுக்கவில்லை. இதன் மூலம் என்னுடைய இயக்குநர் பயணம் தொடங்கி உள்ளது. முப்பது ஆண்டுகால கனவு எதிர்பாராத ஒரு தருணத்தில் நிறைவேறியது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்கிறார் அரவிந்த்சாமி.
ஒரு படைப்பை உருவாக்குவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான சந்தேகமும் தயக்கமும் அறவே எழவில்லை என்று குறிப்பிடுபவர், பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான் இதற்கு காரணம் என்கிறார்.
அவர்கள் அனைவருமே தமக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர் என்றும் அவர்களிடம் இருந்து நேரடியாக பலவற்றைக் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
"வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் நாம் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம். ஆனால் அவ்வாறு ஏதேனும் செய்வதாக இருந்தால், அது குறித்து யோசித்து, கவனித்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கான வாய்ப்புகள் தேடி வரும்போது சிறப்பாகச் செயல்பட முடியும். அந்த வகையில் ஓர் இயக்குநராக எனது முதல் படைப்பை உருவாக்கியதில் மகிழ்ச்சி.
'நவரசா' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரவுத்திரம்' பகுதி மனிதர்களின் கோப உணர்வு குறித்து சித்திரிக்கிறது. இந்தப் பகுதியை தாம் இயக்குவதாக மணிரத்னத்திடம் கேட்டுக்கொண்டாராம்.
"இதற்கு தகுந்த காரணம் உள்ளது. வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு கோப உணர்வை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களும் கதைக் களமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மணிரத்னம் இதற்கு அனுமதி அளித்ததை அடுத்து, ஒரு கதையைத் தயார் செய்தேன். நான் எதிர்பார்த்த வகையில் 'ரவுத்திரம்' உருவானது மனநிறைவு தருகிறது. மேலும், அதற்கான பாராட்டுகளும் கிடைத்து வருவது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் அரவிந்த்சாமி.
இனி இயக்குநர், நடிகர் என இரு தளங்களிலும் பயணம் செய்வதே இவரது திட்டம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

