சென்னையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு இடையே நடிகர் விஜய்யுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிஎஸ்கே அணியின் தலைவருமாகிய மகேந்திர சிங் டோனி நேற்று சந்தித்து பேசினார்.
இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அண்மையில் சென்னையின் ஈசிஆர் பகுதியில் தொடங்கிய இதன் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பின் தொடர்ச்சி நேற்று முதல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் செப்டம்பர் முதல் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் செல்ல சென்னை வந்துள்ள டோனியின் விளம்பரப் படப்பிடிப்பும் விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் ஒரே ஸ்டூடியோவில் நடைபெற்றன.
அப்போது விஜய்யை தேடிச்சென்று பார்த்துள்ளார் டோனி. இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனராம். கிரிக்கெட், சினிமா குறித்து மட்டுமல்லாமல், உலக நடப்புகள், கொரோனா குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் கிரிக்கெட்டின் ‘தல’யும் தமிழ் சினிமாவின் தளபதியும் சந்தித்துக்கொண்டது டோனி, விஜய் ரசிகர்களைப் பெரிதும் உற்சாகமடையச் செய்துள்ளது.
இவர்களது சந்திப்பு நடைபெற்ற கோகுலம் ஸ்டூடியோ குதூகலம் ஸ்டூடியோவாகிவிட்டது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.