ஊடகங்களில் அதிகம் காணப்படும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் கண்ணை மூடிக்கொண்டு சமந்தாவுக்கு முதல் ஐந்து இடங்களில் ஓரிடத்தைக் கொடுக்கலாம்.
அவரைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் ஊடகங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் தனது பெயரில் இருந்து தன் கணவரது பெயரை நீக்கினார் சமந்தா. இதையடுத்து அவரது மண வாழ்க்கையில் ஏதோ பிரச்சினை என்று தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் அவர் அலட்டிக் கொள்வதாக இல்லை.
சமந்தா நடிப்பில் உருவாகி வந்த 'சாகுந்தலம்' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் படம் தன் மனதுக்கு நெருக்கமான படைப்பு என்று கூறுகிறார். இதுதொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்தப் படம் என் வாழ்நாளில் என்னுடனேயே இருக்கும். சிறு வயதில் தேவதைக் கதைகளை அதிகம் நம்புவேன். இப்போதும் அது பெரிதாக மாறிவிடவில்லை.
"என் கனவை நனவாக்கியதில் இப்படத்தின் இயக்குநர் குணா முக்கியமானவர். சொல்லப்போனால் என் கனவு தேவதையை உருவாக்கியவர்.
"அவர் இப்படத்தின் கதையை விளக்கிய அந்த நொடியே அந்த அற்புத உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன், அது சாகுந்தலம் உலகம். அப்படி ஓர் உலகம் எங்குமில்லை. அதை மிகவும் ரசித்தேன்.
"எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஓர் உலகத்தை இயக்குநர் படைத்து விட்டார். என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.
"இதற்காக அவருக்கு நன்றி," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

