நடிகர் விஜய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் தோனியும் நேரில் சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
விஜய் இப்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி நடிக்கும் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் அதே அரங்கில் நடந்துள்ளது.
அப்போது விஜய் அங்கு இருக்கிறார் என்ற தகவல் தோனிக்கு தெரிய வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் தோனி. இதனால் அடிக்கடி சென்னைக்கு வந்து செல்கிறார்.
மேலும், தமிழ்ப் படங்கள் பார்ப்பது, தமிழக உணவுகளை ருசிப்பது என தமிழகத்துடனும் தமிழ் மக்களுடனும் மிகவும் நெருக்கமாகிவிட்டார். விஜய் நடிக்கும் படங்களையும் தவறாமல் பார்ப்பாராம். இருவரும் ஒரே இடத்தில் நடக்கும் படப்பிடிப்புகளில் பங்கேற்ற நிலையில், விஜய்யை தேடிச்சென்று பார்த்துள்ளார் தோனி. அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனராம். கிரிக்கெட், சினிமா குறித்து மட்டுமல்லாமல், உலக நடப்புகள், கொரோனா குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது படக்குழுவில் உள்ள சிலர் கைபேசியில் எடுத்த படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன.

