தமிழில் இன்னும் அறிமுகமாகவில்லையே தவிர தமிழ் சினிமாவின் தலைநகரான கோடம்பாக்கத்திலும் இளையர்கள் மத்தியிலும் கியாரா அத்வானி ரொம்பப் பிரபலம்.
சினிமாவில் பெயரெடுக்கும் முன்பே இணையத்தொடர்களில் திறமையை வெளிப்படுத்தியவர். கியாராவின் கவர்ச்சியும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததால், இயக்குநர் சங்கரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
ராம் சரண் நாயகனாக நடிக்க, தெலுங்கில் பிரம்மாண்டமான படைப்பாகவும் பெரும் பொருட் செலவிலும் உருவாகிறது அந்தப் படம். ராம்சரணின் பதினைந்தாவது படம் என்பதைக் குறிப்பிடும் வகையில் தற்காலிகமாக '#ஆர்சி 15' (#RC15) என குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தின் ஐம்பதாவது படம் என்பதும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
"இப்படிப் பல்வேறு கவனிக்கத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ள இப்படத்தில் நாயகியாக நடிப்பது பெரிய விஷயம். இதை தமிழிலும் வெளியிட உள்ளனர். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்கப் போகிறேன் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்," என்கிறார் கியாரா.
கடந்த ஜூலை 31ஆம் தேதி இவரது பிறந்த நாள். இதை அறிந்த சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் '#ஆர்சி 15' சார்பாக ஒரு பிறந்தநாள் சுவரொட்டியை வெளியிட்டனர்.
இயக்குநர் சங்கருடன் கியாரா அத்வானி பேசிக்கொண்டிருக்கும் காட்சியுடன் கூடிய அந்தப் புகைப்படம் இன்று தென்னிந்திய இளையர்கள் மத்தியில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
"நான் பழம்பெரும் இந்தி நடிகர் அசோக்குமாரின் பேத்தி. இது பலருக்குத் தெரியாது. எனது இயற்பெயர் ஆலியா. 29 வயதாகிவிட்டது என்பதை தயக்கமின்றிச் சொல்வேன். நடிகை ஜூஹி எனக்கு அத்தை முறை வேண்டும். சல்மான்கான், ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை," என்று சொல்லும் கியாரா, தகவல் தொடர்புத்துறையில் பட்டம் பெற்றவர்.
'ஃபக்லி' இந்திப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தோனியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'எம்.எஸ்.தோனி: தி அன் டோல்ட் ஸ்டோரி' படம் அவரை இந்தியாவின் மூலைமுடுக்கு வரை கொண்டு சேர்த்தது எனலாம். அந்தப் படத்தில் தோனியின் மனைவி சாக்ஷியின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் கியாரா.
"அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்தேன். ஆனால் விமர்சகர்கள் என்னை மனதாரப் பாராட்டிய பிறகே நாம் ஏதோ உருப்படியாகச் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பிறகும் என் மனதுக்குத் தோன்றிய வகையில் நடிக்கிறேன். எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றையும் திறந்த மனதோடு வரவேற்கிறேன்," என்கிறார் கியாரா.
'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற இணையத்தொடரில் நடித்ததைத்தான் இவ்வாறு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். அதில் குடும்ப வாழ்க்கையில் போதிய மகிழ்ச்சி இன்றித் தவிக்கும் பெண்ணாக கவர்ச்சிக் காட்சிகளில் நடித்தார் கியாரா. அவரது நடிப்பில் மிகுந்த பக்குவமும் கச்சிதமும் இருந்ததாகப் பலரும் பாராட்டிய அதே வேளையில், கடும் விமர்சனங்களும் எழுந்தன.
"அதன் பிறகுதான் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி கதாநாயகி என்பதை நான் உணரும் முன்பே, ஊடகங்கள் அதுகுறித்து நிறைய செய்திகளை வெளியிட்டன.
"ராம் சரணுடன் 'வினய விதேயா ராமா', 'அர்ஜுன் ரெட்டி', இந்தி மறுபதிப்பான 'கபீர் சிங்' படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடி, அக்ஷய் குமாரின் 'குட் நியூஸ்' படத்தில் இன்னொரு நாயகி, இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா' மறுபதிப்பின் நாயகி என வரிசையாக வாய்ப்புகள் அமைந்தன.
"அதன் உச்சக் கட்டமாக இப்போது சங்கர் இயக்கத்தில் நடிக்கிறேன் என்பதும் அதன் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கிறேன் என்பதும் உற்சாகம் அளிக்கிறது" என்கிறார் கியாரா.
இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருபவர், கிசுகிசுகளைக் கண்டுகொள்வதில்லை. வாரந்தோறும் தனது கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டகிராமில் மறவாமல் பதிவிடுகிறார். சமூகம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக சில கருத்துகளையும் பதிவிடுகிறார்.
கியாராவும் இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேட்டும், எந்த தகவலையும் கியாரா பகிர்ந்து கொண்டதில்லை.

