தமிழ்த் திரையுலகத்தினருக்குப் பெரிதும் நம்பிக்கையூட்டிய 'ஓடிடி' எனப்படும் இணைய வெளியீட்டுத் தளங்கள் மீதான நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டுள்ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 'ஓடிடி'யில் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்த பல தயாரிப்பாளர்கள் இப்போது அந்த அளவுக்கு முயற்சி செய்வதில்லை.
காரணம், அத்தகைய தளங்களில் வெளியீடு கண்ட பல படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதுதானாம்.
கொரோனா ஊரடங்கின் போது திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். அச்சமயம் 'ஓடிடி' தளங்கள் புது வெளிச்சமாய் கோடம்பாக்கத்தைச் சூழ்ந்து நம்பிக்கை அளித்தன.
சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் நயன்தாராவின் 'மூக்குத்தி' அம்மன் தொடங்கி, யோகிபாபுவின் 'மண்டேலா' வரை பல படங்களை 'ஓடிடி' நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கின.
எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்த நிலையில், சில முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய இயக்குநர்களின் படைப்புகள் 'ஓடிடி' தளங்களில் பெரிதாக எடுபடாமல் போனதுதான் முதல் சறுக்கலாக அமைந்தது. கடந்த ஆண்டு இணைய வெளியீட்டுத் தளங்களில் வெளியான பல படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற படங்களை வெளியிட்ட நிறுவனங்களுக்கு நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்கிறது ஊடகச் செய்தி.
அதேபோல் நடப்பு ஆண்டில் வெளியான படங்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடியவை தாக்குப்பிடித்து நின்றதாகத் தகவல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்', மணிரத்னம் தயாரித்த ஆந்தாலஜி படமான 'நவரசா', நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' ஆகிய படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரியவில்லை.
ஆனால் அவற்றுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களும் மோசமான பின்னூட்டங்களும் அவற்றை வெளியிட்ட தரப்புக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனவாம்.
"இதனால் நேரடியாக இணையத்தில் வெளியாகும் படங்களுக்கு இருந்த மவுசு மெல்ல குறையத்தொடங்கி உள்ளதாகப் பேச்சு.
"இணையத்தில் வெளியீடு காணும் படங்கள் தரமாக இல்லை என்ற கருத்து பரவினால், மக்கள் 'ஓடிடி' யில் படம் பார்க்க தயங்குவார்கள். இதனால் அந்நிறுவனங்கள் வாங்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து, ரசிகர்களின் கவனம் மீண்டும் திரையரங்குகள் பக்கம் திரும்பக்கூடும். அந்த வகையில் திரையரங்க உரிமையாளர்களும் பட விநியோகிப்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்," என்று தமிழக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
'ஓடிடி' தளங்களுக்காக திரைப்படங்களைத் தேர்வு செய்து வாங்கும் பொறுப்பில் உள்ள சிலர், தங்களுக்குத் தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்களின் படங்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள்," என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
"வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து எடுத்த படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒருவேளை முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் தயாரித்திருந்தால் மட்டும் விலை கொடுத்து வாங்குகின்றன," என்ற புலம்பலும் உள்ளது.
அதேசமயம் சூர்யா, நயன்தாரா போன்று நல்ல கதைக்களங்களைத் தேர்வு செய்யும் கலைஞர்களுக்கு அந்நிறுவனங்கள் உரிய மரியாதை தருவதையும் மறுப்பதற்கில்லை.
"பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்கில் மீண்டும் வெளியீடு காணும்போது மீண்டும் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்பதே அவர்களின் நம்பிக்கையாக உள்ளது," என்று ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அண்மையில் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்ட, நயன்தாராவின் நெற்றிக்கண் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எனினும் படத்தை வெளியிட்ட நிறுவனத் தரப்பு உற்சாகமாக இருப்பதாகத் தகவல்.
, :
நயன்தாரா

