நேரடியாக இணையத்தில் வெளியாகும் திரைப்படங்களின் வசூல் நிலவரம் திருப்திகரமாக இல்லை என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடும் வேளையில், 'ஓடிடி' தளங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கான காரணங்களையும் கச்சிதமாக முன்வைக்கிறார்.
ஐஸ்வர்யா நடித்த 'க/பெ.ரணசிங்கம்' படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்டது. நாயகியாக மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை 199 ரூபாய் கட்டணம் செலுத்தி பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்புத் தரப்புக்கு இருபது கோடி ரூபாய் கிடைத்துள்ளதாம்.
எனவே நேரடியாக 'ஓடிடி'க்காக தயாராகும் படங்களில் நடிப்பதில் தமக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார்.
ஐஸ்வர்யா நடித்துள்ள 'திட்டம் இரண்டு' படம் அண்மையில் நேரடியாக இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து 'பூமிகா' என்ற இன்னொரு திகில் படமும் இணைய வழி வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால், தென்னிந்திய மொழிகளில் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து நடிப்பதால், நயன்தாராவுக்குப் போட்டியாகச் செயல்படுவதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல என்று ஐஸ்வர்யா தரப்பில் கூறப்படுகிறது.
"என்னைத் தேடி பல கதைகள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான கதைகளில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது நானே எதிர்பாராத ஒன்று. பல சமயங்களில் இதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
"ஒரு படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் யார் யார் அதில் நடிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள். என் கையில் எதுவும் இல்லை. அதேபோல் கதைகளை தேர்வு செய்வதும் தயாரிப்பார்கள்தான். இந்தப் பெருந்தொற்று நெருக்கடி வேளையில் தயாரிப்பாளர்களும் கடும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் கடன் வாங்கிதான் படம் தயாரிக்கின்றனர். வட்டித் தொகையைக் கட்டப்போவதும் அவர்கள்தான்.
"தமிழகத்தில் உடனடியாக திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் கொரோனா அச்சத்தை மீறி அதே வேகத்தில் படம் பார்க்க வருவார்களா என்பது சந்தேகம்தான். யாரையும் கட்டாயப்படுத்தி திரையரங்குக்கு வரவழைக்க இயலாது. எனவே எல்லோருக்குமே மூச்சு விட்டுக்கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை.
"இப்படிப்பட்ட சூழலில் 'ஓடிடி' தளங்கள் பாதுகாப்பான பொழுதுபோக்கு தளமாக மாறியுள்ளது" என்கிறார் ஐஸ்வர்யா.
'ஓடிடி' தளம், திரையரங்குகள் என எதுவாக இருந்தாலும் தமக்கு தயக்கமில்லை என்று குறிப்பிடுபவர், தன்னை நம்பி படம் தயாரிப்பவர்களும் இயக்குநர்களும் நஷ்டம் அடையாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.
"நான் நயன்தாராவுக்கு போட்டி என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி என்பேன். உண்மையில், போட்டி என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கு திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். எனது அனுபவத்தை வைத்துத்தான் இவ்வாறு சொல்கிறேன்.
"முன்பு நான் நடித்த 'கனா' படம் வெளியானபோது மேலும் ஐந்து படங்கள் வெளியீடு கண்டன. இதனால் 'கனா'வை திரையிட ஒப்புக்கொண்ட பல திரையரங்குகளின் நிர்வாக தரப்பினர் திடீரென பின்வாங்கினர். குறிப்பிட்ட தேதிகளில் எங்கள் படத்துக்கு ஒரு காட்சியைக் கூட ஒதுக்க இயலாது என கைவிரித்தனர்.
"ஆனால் 'கனா' படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாக வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி சில திரையரங்குகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது.
"தரமான படைப்பு என்பதை உணர்ந்த ரசிகர்கள் படையெடுக்கவே, அந்தப் படத்தை திரையிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை எந்த விளம்பரமும் இன்றி மளமளவென அதிகரித்தது. அப்போதுதான் தரமும் திறமையும் இருந்தாலே போதுமானது, திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன். திரையுலகில் இது எனக்கு மகிழ்ச்சியான காலகட்டம்," என்கிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ராஜேஷ்

