திரையில் நகைச்சுவையைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்குப் பல்வேறு விஷயங்கள் கச்சிதமாக அமைய வேண்டும் என்கிறார் இயக்குநர் கண்ணன்.
ஏறத்தாழ 39 ஆண்டுகளுக்குமுன் வெளியீடு கண்டு தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய 'காசேதான் கடவுளடா' படத்தை அதே தலைப்பில் இவர் மறுபதிப்பு செய்கிறார்.
மிர்ச்சி சிவா நாயகனாகவும் பிரியா ஆனந்த் (படம்) நாயகியாகவும் நடிக்கின்றனர். யோகிபாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களை ஏற்க, கண்ணன் இசையமைத்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னைக்கு அருகே உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பெரிய பங்களாவில் படமாக்கி உள்ளனர். மேலும், மிகப்பெரிய பாதுகாப்புப் பெட்டக அறையை கலை இயக்குநர் ராஜ்குமார் அமைத்துள்ளார்.
"அந்தப் பெட்டக அறையில்தான் பல கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகைகள், வைரங்கள் என எல்லாம் குவிந்திருப்பதுபோல் சித்திரித்திருக்கிறோம். அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க மூன்று பேர் திட்டமிடுகின்றனர். இதுதான் படத்தின் முக்கிய அம்சம். இது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத் தெரியும்.
"இன்றைய இளையர்களும் விரும்பும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம். பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் நுழைய நான்கைந்து மறைச் சொற்கள் (பாஸ்வேர்ட்), மிரட்டும் லேசர் கதிர்கள் என நவீன அம்சங்களை வைத்திருக்கிறோம்," என்கிறார் கண்ணன்.
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். முதலில் நடிக்க மறுத்தவர், பிறகு கண்ணனும் சிவாவும் வற்புறுத்திய பிறகு ஒப்புக் கொண்டாராம்.
"தேங்காய் சீனிவாசன் எப்படிப்பட்ட தரமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மிகவும் தயங்கினேன். என்னால் முடியும் என்று படக்குழுவினர் ஊக்கம் அளித்தனர்.
"மேலும், நகைச்சுவையான கதைக்களம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். தேங்காய் சீனிவாசன்போல் நடிப்பது என்பது பெரும் சவால். இதை நன்கு உணர்ந்திருக்கிறேன்," என்கிறார் யோகிபாபு.
தனக்கான கதாபாத்திரத்தில் தனது முத்திரையும் இருக்கும்படி பார்த்துக்கொள்வாராம். அதனால் தேங்காய் சீனிவாசன் பாணியில் யோகியின் வழக்கமான நையாண்டிகளை எதிர்பார்க்கலாம் என்கிறார் இயக்குநர்.
நாயகன் மிர்ச்சி சிவாவைப் பொறுத்தவரை வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். 'காசேதான் கடவுளடா' போன்ற கதைக்களத்தி்ல் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அதிர்ஷ்டம் என்கிறார்.
"நானும் பிரியா ஆனந்தும் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளோம். எனவே அவருடன் ஒருவித புரிதல் உள்ளது. நான் ஒரு காட்சிக்கு எப்படி தயாராவேன், எப்படி நடிப்பேன் என்பது அவருக்கு நன்கு தெரியும். மேலும் எந்த காட்சியை நான் நகைச்சுவையாக அணுகுகிறேன் என்பதும் அவருக்கு அத்துப்படி.
"நகைச்சுவையைப் பொறுத்தவரையில் அதில் சம்பந்தப்பட்டவர்கள் இடையேயான புரிதல் அவசியம். அசல் பதிப்பில் நடிகை லட்சுமி நடித்த வேடத்தை பிரியா ஏற்றுள்ளார். அது மிகவும் சவாலான கதாபாத்திரம். பிரியாவால் அதற்கு ஈடுகொடுக்க முடியும் என நினைக்கிறேன். அதனால்தான் இயக்குநர் அவரைத் தேர்வு செய்துள்ளார்," என்கிறார் சிவா.
'காசேதான் கடவுளடா' என்ற தலைப்பைக் கேட்டதுமே கருணாகரன் உற்சாகமாகிவிட்டாராம். புதிய பாணியில் அமைக்கப்பட்ட திரைக்கதையும் அவரைக் கவர்ந்துள்ளது.

