வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கப்போவதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் எந்தப் படமும் வெளிவந்த பாடில்லை.
சில நாள்களுக்கு முன்புகூட 'டிடெக்டிவ் நேசமணி' என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், முதல்தோற்றச் சுவரொட்டியையும் யாரோ சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருந்தனர். ஆனால் வடிவேலு தரப்பு அது வதந்தி என உறுதிப்படுத்தியது.
'ஓடிடி' தளத்தில் அவர் நகைச்சுவை நிகழ்ச்சியை வழிநடத்தப் போவதாகக் கூறப்படுவதும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதுத் தகவல் வெளியாகி உள்ளது. இதை வடிவேலு தரப்போ, இயக்குநர் சுராஜோ இன்னும் மறுக்கவில்லை.
"எனவே, இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும், குறைந்தபட்சம் பத்து இயக்குநர்களிடம் கதை கேட்டு, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.
"அவை குறித்து ஒரே நாளில் அடுத்தடுத்து அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என வடிவேலு விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளார்," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
இதற்கிடையே, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' இரண்டாம் பாகம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலுமீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணாமல் அவர் புதுப்படங்களில் நடிக்கக் கூடாது என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. எனவே, தயாரிப்பாளர் சங்கம் மூலம் தடை ஏற்பட்டால், தனது படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுவது என முடிவுசெய்துள்ளாராம் வடிவேலு. இதற்கு ஒப்புக் கொள்ளும் இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடிப்பாராம்.

