தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி, வித்தியாசமான கதைகளில் கதாபாத்திரமாக வாழ்ந்து, முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
"கடந்த காலத்தில் மட்டுமின்றி, இப்போதும் தனது சினிமா வாழ்க்கை போராட்டமாகவே இருந்து வருகிறது," என தமிழக திரைச்செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளார்.
அத்துடன், தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பும் பின்பும் பட்ட சிரமங்களையும் அவமானங்களையும் அவர் மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
"எனக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லாததால், நான் நடிகையாவது சுலபத்தில் அமையவில்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் ஒரு முன்னணி நடிகை என்ற இந்த இடத்தை எட்டிப் பிடித்துள்ளேன்," என்றவர், தனது குடும்பத்தினருடன் சென்னை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்ததாகவும் கூறியுள்ளார்.
"எட்டு வயதில் தந்தையை இழந்தேன். படிப்பறிவில்லாத எனது அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பைக்குச் சென்று புடவைகளை வாங்கிவந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்து குழந்தைகளைக் காப்பாற்றினார்.
"சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்," என்று சொன்னார் ஐஸ்வர்யா.
பாலியல் ரீதியில் எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து மோசமாக கேலி செய்தனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு முன்னேற முயற்சி செய்கிறேன்.
"எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பாத்திரங்கள் அமைந்தன. ஆனால், இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டத்துடன்தான் தொடர்கிறது," என்கிறார்.
கடந்த 2011ல் 'அவர்களும் இவர்களும்' படத்தின் வழி தமிழ்த் திரைத்துறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார்.
'அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்றவர், 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'திருடன் போலிஸ்' போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
'காக்கா முட்டை' படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நாயகன்களுடன் கைகோத்து வரும் ஐஸ்வர்யா, "நான் எப்போதும் இயக்குநரின் நடிகை. அவர்கள் எழுதும் கதையை நடிப்பில் கொண்டுவர விரும்புவேன். மக்கள் என்னை நேசிப்பதில் மகிழ்ச்சி," என்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்

