ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா 2021 நடைெபற்றது. இவ்விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதுகளை 'சூரரைப் போற்று' திரைப்படம் வென்றுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொளி வழி நடத்தப்பட்டது.
அப்போது, 'சூரரைப் போற்று' திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டு, இரு விருதுகளை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் சூர்யாவுக்கு (படம்) சிறந்த இந்திய நடிகருக்கான விருதும் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு சிறந்த படத்துக்கான விருதும் என இரு விருதுகள் கிடைத்துள்ளன.
இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
"நடிப்பின் நாயகன் சூர்யா," என்றும் "நீ ஜெயிச்சுட்ட மாறா," என்றும் சூர்யா ரசிகர்கள் ஏராளமான டுவிட்களையும் 'சூரரைப் போற்று' படக்காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அளவில் 'ஷெர்னி' திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் வித்யா பாலனை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
இந்தத் திரைப்பட அறிவிப்பைத் தொடர்ந்து, 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் ஈழத்துப் போராளியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், "இந்த விருது தனக்கு மிக மிக முக்கியமானது, சிறப்பானது. இயக்குநர்கள் ராஜ், டிகே ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு மிகப்பெரிய நன்றி," என்று நடிகை சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் நாயகனாக நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு சிறந்த இணையத் தொடருக்கான நடிகர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, அடுத்தடுத்த நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளன.
'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகின்றன.
சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டிகள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு மிகப் பிரமாண்டமாக ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா என்னதான் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் அவருடைய ஒரு வெற்றி மொத்தத்தையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் ரூ.200 கோடியைத் திரைப்பட தயாரிப்பில் கொட்டவுள்ளாராம் கலைப்புலி எஸ் தாணு.
கமல்ஹாசனைப் போன்று தான் நடிக்கும் படங்களின் பாத்திரங்களுக்காக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் மெனக்கெடக்கூடியவர் சூர்யா. இவர் கமலை தனது திரையுலக குரு என பலமுறை கூறியுள்ளார். தற்போது கமலும் சூர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்களாம்.
இதனால் இந்த இரு பெரிய நாயகன்களையும் ஒன்றாகத் திரையில் பார்க்க இருவரின் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பிரபல மலையாள இயக்குநர் அமல் நீரத், அண்மையில் ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கமல், சூர்யாவை மனதில் வைத்து புதிய கதை ஒன்றை உருவாக்கி வருகிறேன். இதுபற்றி கமல், சூர்யாவிடமும் கூறிவிட்டேன். அதற்கு நாயகன்கள் இருவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் கதையைத் தயார் செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
, :