கொரோனா தொற்றுப் பரவலுக்கு முன்னர் தாம் ஒப்புக்கொண்ட படங்கள் அனைத்திலும் நடித்து முடித்துள்ளதாகச் சொல்கிறார் வாணி போஜன்.
கோடம்பாக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். இப்போது பரத்துடன் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விக்ரம், அவரது மகன் துருவ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் 'மகான்' படத்தில் வாணியும் ஒரு நாயகி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அந்தப் படத்திலும் தமக்கு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்.
"கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ஏற்கெனவே இணையத்தொடர் ஒன்றில் நடித்திருக்கிறேன். நான் அவரது தீவிர ரசிகையும்கூட. அவர் படம் இயக்கும் பாணி ரொம்பப் பிடிக்கும்.
"'மகான்' படத்தில் நானும் நடிக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் விரும்புவதாக அறிந்தேன். அவர் என்னிடம் கதையை விவரித்தபோது பல்வேறு சுவாரசியமான அம்சங்களும் திருப்பங்களும் இருப்பது என்னைக் கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்கிறார் வாணி.
'மகான்' பட நாயகன் விக்ரம் குறித்து தாம் நிறைய கேள்விப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவ்வளவு விரைவாக கிடைக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை என ஒப்புக்கொள்கிறார்.
"பத்து நாள்கள் தூங்காமல் நடிக்க வேண்டும் என்றாலும் விக்ரம் சார் அதற்குத் தயாராக இருப்பார். படப்பிடிப்பின்போது அவர் எந்நேரமும் சுறுசுறுப்பாக இருப்பார், அபார சக்தியுடன் நடிப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நேரில் பார்த்தபோது வியப்பாக இருந்தது. அனைவரிடமும் அன்பாகப் பேசுவார்.
"அதேபோல் துருவ்வும் கூட மிக இயல்பானவர். முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல் அவர் நடித்திருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரிடம் தந்தையின் சாயல் அதிகம் தெரியும். இனி சின்னத்திரை தொடர்களில் என்னைப் பார்க்க முடியுமா என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
"தொலைக்காட்சி தொடர்கள்தான் என்னை நடிகையாக அடையாளப்படுத்தியது. நான் ஓரளவு நடிக்கிறேன் என்றால் அதற்கு சின்னத்திரையில் கற்ற பாடங்களும் அனுபவமும்தான் காரணம். சின்னத்திரைக்கும் சினிமாவுக்கும் இடையே சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. அங்கு ஒரு தொடரின் நாயகியாக ஐந்து ஆண்டுகள் கூட நடிப்போம். சினிமாவில் ஓரு படத்துக்காக சில மாதங்கள் மட்டுமே அவ்வாறு நடிக்கிறோம்.
"வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை எனப் பெயர் எடுப்பதில்தான் எனது முழுக்கவனமும் உள்ளது. யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்பதை அறிந்து கொள்வதில் எல்லாம் எனக்கு அறவே விருப்பம் இல்லை. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை கவனித்தால் நான் சொல்வது உண்மை என்பது புரியும்.
"வித்தியாசமான பாத்திரங்கள் வேண்டும் என்று விரும்பிக் கேட்கிறேன். விருப்பத்துடனும் ஈடுபாட்டு டனும் செய்யும் எதுவும் நமக்குப் பாரமாக இருக்காது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள ஆசைப்படு கிறேன்," என்கிறார் வாணி.
சசிகுமாருடன் இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த படம் எந்த நேரத்திலும் வெளியீடு காண தயாராக உள்ளதாம்.

