ஒருபக்கம் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் 'ஓடிடி' எனப்படும் நேரடியாக இணையத்தளம் வழி வெளியிடப்படும் படங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தற்போது தமிழகத் திரையரங்குகளில் முதற்கட்டமாக 50 விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் சில படங்களின் தயாரிப்புத்தரப்பு ஆர்வம் காட்டவில்லை.
அதனால் முன்பே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 'துக்ளக் தர்பார்', 'டிக்கிலோனா', 'கடைசி விவசாயி' ஆகிய படங்கள் 'ஓடிடி'யில்தான் வெளியாகின்றன.
எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விஜய் சேதுபதி, ராஷிகண்ணா நடித்திருக்கும் 'துக்ளக் தர்பார்' படம் செப்டம்பர் 10ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இதன் 'ஓடிடி' உரிமத்தை முன்னணி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'கடைசி விவசாயி' படமும் முன்னணி 'ஓடிடி' தளத்தில் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படமும் தொலைக்காட்சி, 'ஓடிடி' தளம் என அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளது.
கடந்த ஏப்ரலில் 'கர்ணன்' படம் வெளியான சமயத்தில் தொற்றுப் பரவல் பாதிப்பால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. அப்போது 'ஓடிடி' தளங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்போதும் பல படங்கள் இணையத்தளங்களில் வெளியீடு காண்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

