இந்த உலகத்தை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் தம்மிடம் உள்ளது என்கிறார் இளம் நாயகன் அதர்வா.
தமது தந்தையும் நடிகருமான முரளியின் மறைவுக்குப் பின்னர் திரையுலகில் தமது ஒவ்வோர் அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோடம்பாக்கத்து சண்டைப் பயிற்சியாளர்களின் செல்லப்பிள்ளை என்றுதான் அதர்வாவைப் பெரும்பாலானோர் குறிப்பிடுகின்றனர். காரணம், சண்டைக் காட்சிகளுக்காக அவர் தரும் உழைப்பு அப்படிப்பட்டது.
சண்டைக் காட்சிகள் என்றால் அதர்வா உற்சாகமாகிவிடுகிறார். கடினமான காட்சி அமைப்பிலும் கூட துணிச்சலுடன் பங்கேற்பார்.
"ஏதேனும் ஒரு விஷயத்தைப் புதிதாக முயற்சி செய்யும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் வேகமெடுக்கும். அப்போது மனதுக்குள் ஒருவித உற்சாகமும் வேகமும் ஏற்படும்.
"இந்த உணர்வை அனுபவிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.
"முதன் முதலாக பயணம் மேற்கொண்டபோதும் மிக உயரமான இடத்தில் இருந்து கயிறு கட்டிக்கொண்டு குதிக்கும் (Bungee Jump) போதும் இந்த உணர்வு ஏற்பட்டது.
"ஆனால் ஒவ்வொரு முறையும் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது நான் இதே உணர்வைப் பெறுகிறேன். அதனால்தான் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்க முடிகிறது," என்கிறார் அதர்வா.
எந்தவொரு கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதற்கு ஏற்ற நடிப்பை தம்மால் வழங்க இயலுமா எனப் பலமுறை யோசித்த பிறகே முடிவெடுப்பது இவரது வழக்கமாக உள்ளது.
மனதில் சிறிய சந்தேகம் எழுந்தாலும்கூட, அது நிவர்த்தி ஆகும்வரை விடமாட்டாராம்.
எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதர்வாவுக்கும் உள்ளது. அதேபோல் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு இப்படியொரு வாய்ப்பு தேடி வந்ததாம். ஆனால் அன்றைய சூழல் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனதாம்.
"ஒருவேளை இப்போது அப்படிப்பட்ட வாய்ப்பு தேடிவந்தால் தயங்காமல் ஒப்புக்கொள்வேன். அப்பா (முரளி) இருந்த வரை எல்லாம் எளிதாக இருந்தது. நான் அவரது பாதுகாப்பில் இருப்பதாக உணர்ந்தேன்.
"ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு ஒவ்வோர் அடியை எடுத்து வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது. மனதளவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டேன்.
"ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் கடந்து வந்ததில் பக்குவமாகிவிட்டேன். இனிமேல் எதுவும் எனக்கு சவாலாக இருக்காது. அனைத்தையும் எனது பொறுப்பாகப் பார்க்கிறேன்," என்று சொல்லும் அதர்வா, தமது தந்தை நடிப்பில் வெற்றிபெற்ற திரைப்படங்களின் மறுபதிப்பில் நடிக்க விரும்பவில்லை என்கிறார்.
முரளி நடித்து பெரும் வெற்றிபெற்ற 'இதயம்' படத்தின் மறுபதிப்பில் நடிக்கக் கேட்டு தம்மை அணுகியபோது முடியாது என மறுத்துவிட்டாராம். காலத்துக்கு ஏற்ப கதையை மாற்றி அமைக்கும்போது அசல் படைப்பின் முக்கிய அம்சங்கள் சிதைந்துவிடக்கூடும் என்றும் அதைச் செய்ய தாம் விரும்பவில்லை என்றும் விளக்கம் அளிக்கிறார்.
ஒரு நடிகராக எந்த வகையில் உங்களை மெருகேற்றிக்கொண்டதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, "ஒரு நடிகன் என்ற வகையில் எனக்கான எல்லைகள் என்று எதையும் இதுவரை வகுத்துக் கொண்டதில்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கான அடிப்படை விதிமுறைகள் என்று எதையும் நான் பின்பற்றுவதில்லை.
"இயக்குநர் பாலா, 'பரதேசி' படத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்தபோது எனது முந்தைய படங்களின் வெற்றி தோல்வியையோ, எனது கடந்தகால நடிப்பு குறித்தோ அவர் யோசிக்கவில்லை.
"தனது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு நடிகன் கிடைத்தால் போதும் என்ற முடிவுடன்தான் என்னை ஓப்பந்தம் செய்தார். ஒரு நடிகனாக என்னை முழுமையாக மெருகேற்றியவர் அவர்தான். என்னை வைத்துப் படம் எடுக்கும் அனைத்து இயக்குநர்களும் என்னை இவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்," என்கிறார் அதர்வா.
, :
அதர்வா

