பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் தான் நடிக்க வந்ததாகவும் குறுகிய காலத்தில் திரையுலகத்தினர், ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் சொல்கிறார் 'அம்மு' அபிராமி.
'ராட்சசன்' படம் பார்த்தவர்கள் அதில் 'அம்மு' எனும் பள்ளி மாணவியாக நடித்த அபிராமியை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.
அதன் பலனாக வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், ஜித்து ஜோசப், ஹரி என்று பல இயக்குநர்களின் படங்களில் ஏதேனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரைப் பார்க்க முடிகிறது. அனைத்திலுமே அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைவதுதான் பெரும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்ப தாகச் சொல்கிறார் அம்மு.
சென்னையில் பிறந்து வளர்ந்த அபிராமி பள்ளியில் படிக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டாராம். குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினாராம்.
"அதன் பிறகு நாடகங்கள் பலவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். அப்போதுதான் நடிப்பின் மீதான எனது ஆர்வம் வெகுவாக அதிகரித்தது," என்கிறார் அபிராமி.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தபோது அதைக் கொண்டாடும் விதமாக தன் தாயாருடன் படம் பார்க்க திரையரங்குக்கு சென்ற இவரை, அங்கு 'ராட்சசன்' பட இயக்குநர் ராம்குமார் பார்க்க நேர்ந்திருக்கிறது. உடனடியாக தனது உதவி இயக்குநர் மூலம் அம்முவின் பெற்றோரை அணுகி பேச வைத்துள்ளார்.
"அதன் பிறகு நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். என் அப்பாவும் சினிமா துறையில் இருப்பவர்தான். ஒலிப்பதிவு நிபுணரான அவர், பல வெற்றிப் படங்களில் பணியாற்றியவர். சினிமாவில் நடிப்பதை அவர் எதிர்க்கவில்லை," என்று சொல்லும் அபிராமி, இதுவரை தாம் ஏற்று நடித்த அனைத்து பாத்திரங்களுமே தமக்குப் பிடித்தமானவை என்கிறார்.
"விஜய் அண்ணாவின் 'பைரவா' படத்தின் ஒலிப்பதிவாளராக அப்பா பணியாற்றினார். ஒருநாள் அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அறிவுறுத்தினார். அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் பின்னாள்களில் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
"அதனால் சிறிய வேடத்தில் நடித்தேன். அப்போதுதான் அப்பா சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெரியவந்தது. துணை நடிகர்களோடு கூட்டத்தில், வெயிலில் நின்று நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை புரிந்துகொண்டேன். இப்படித்தான் எனது ஒவ்வொரு கதாபாத்திரமும் நல்ல அனுபவமாக மாறி என்னை வளர்த்துக்கொள்ள உதவி இருக்கிறது," என்கிறார் அபிராமி.
'ராட்சசன்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'ராட்ஷசுடு', 'அசுரன்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'நரப்பா' இரண்டிலுமே இவர்தான் நடித்துள்ளார். 'அசுரன்' படத்தில் நடிக்கப்போவது தெரியாமலேயே அதில் ஒப்பந்தமானாராம். முதல் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அந்த விவரம் தெரிய வந்திருக்கிறது.
"நாளை படப்பிடிப்பு எனில், முந்தைய நாள்தான் எனக்குத் தகவல் வந்தது. என்ன படம், என்ன வேடம், யார் கதாநாயகன், நாயகி என எதுவும் தெரியாமலேயே படப்பிடிப்பு நடந்த இடத்துக்குச் சென்றோம்.
"அங்கு எனக்கும் தனுஷுக்கு மான காட்சிகளை எடுக்கத் தொடங்கினார் இயக்குநர். தனுஷை நான் 'மாமா' என்று கூப்பிடுவது, அவர் எனக்கு காலணிகள் தைத்துக் கொடுப்பது போன்ற காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. 'கத்தரிப் பூ அழகி' பாடலும் முடிந்தது. பிறகுதான் அது 'அசுரன்' படம் என்பதும் தனுஷின் காதலியாக நான் நடிக்கிறேன் என்பதும் புரிந்தது.
"கிடைத்த அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்," என்கிறார் அம்மு அபிராமி.
, :
'அம்மு' அபிராமி

