திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
f7cd8a88-0f13-4730-8613-5890b6aff2d4
-
multi-img1 of 3

வில்லி வேடத்தில் காஜல் அகர்வால்

திருமணத்துக்குப் பிறகும் கூட காஜல் அகர்வாலுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் புதுப்படம் ஓன்றில் வில்லியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

தெலுங்கில் தயாராகும் அப்படத்தில் நாகார்ஜுனா வுடன் வில்லியாக மோத உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் எதிர்மறை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜோதிகா 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் வில்லி வேடம் ஏற்றார். சிம்ரன் 'ஐந்தாம்படை', 'சீமராஜா' உள்ளிட்ட படங்களில் வில்லியாக அசத்தி இருந்தார். இப்போது கார்த்தியின் 'சர்தார்', பிரசாந்தின் 'அந்தகன்' படங்களிலும் அவர் எதிர்மறை வேடங்களில் நடிப்பதாகத் தகவல். ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா ஆகியோரும் வில்லி வேடத்தில் நடித்து பெயர் வாங்கிய நடிகைகள்.

"கோலமாவு கோகிலா'வில் நயன்தாரா தான் நாயகி என்றாலும் வில்லத்தனம் செய்வார். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே காஜலும் விரும்பினாராம். ஆனால் அதற்குப் பதில் நேரடி வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, அதை தட்டிக்கழிக்க மனமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மகிமாவுக்கு சிறந்த நடிகை விருது

'மகாமுனி' படத்தில் நடித்த இளம் நாயகி மகிமா நம்பியாருக்கு ஸ்பெய்ன் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதையடுத்து ஏராளமான சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், மேட்ரிட் திரைப்பட விழாவிலும் முத்திரை பதித்துள்ளது 'மகாமுனி' படம். விருது பெற்ற மகிழ்ச்சியில் உள்ள நம்பியார் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். படக்குழுவின் ஒத்துழைப்பு இன்றி தமக்கு இந்த விருது கிடைத்திருக்காது என்றும் தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவா, கௌதம் மேனன் கூட்டணி

கௌதம் மேனனும் சிவகார்த்திகேயனும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடிந்திருப்பதாகத் தகவல். தற்போது 'டான்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். இதனைத்தொடர்ந்து அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, கெளதம் மேனன் படத்தில் சிவா இணைவார் எனக் கூறப்படுகிறது. இப்போது சிம்புவுடன் கூட்டணி அமைத்து 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை இயக்கி வரும் கௌதம், அடுத்தடுத்த படங்களுக்கான பணிகளையும் ஒருசேர கவனித்து வருகிறார். சிம்பு படத்தை முடித்த கையோடு சிவாவுடனான படத்துக்குரிய வேலைகளைத் தொடங்குகிறார் கௌதம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.