"என்னிடம் இருந்த ஒரு நல்ல கதைக்காக ஆறு மாதங்கள் என்னை இடைவிடாமல் தொடர்புகொண்டார் நடிகை டாப்சி. அவரது ஆர்வம் என்னை வியக்க வைத்தது," என்கிறார் இயக்குநரும் கதாசிரியருமான நந்தா பெரியசாமி.
தன் கதையை தமிழில்தான் படமாக்க வேண்டும் என்று நந்தா உறுதியாக இருக்க, டாப்சியோ முதலில் இந்தியில் படம் எடுத்துவிட்டு, பிறமொழிகளுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினாராம். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி டாப்சி சொன்னதை ஏற்றுக்கொண்டுள்ளார் நந்தா. அப்படி உருவானதுதான் இந்தியில் 'ராஷ்மி ராக்கெட்' இந்தித் திரைப்படம்.
"தமிழில் 'மெடல்' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி ஒளிப்பதிவாளர் ராம்ஜி மூலமாக நயன்தாராவை அணுகினேன். அன்று தொடங்கி பத்தாவது நாளில் கதை சொல்வதற்கு நேரம் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் அவர் ஒதுக்கியது வெறும் 15 நிமிடங்கள்தான். அதற்குள் எப்படி கதை சொல்வது என்று யோசித்தேன்.
"என் மகனுக்கு அனிமேஷன் துறையில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது அது தொடர்பாக ஏதாவது முயற்சி செய்வான். எனவே, அனிமேஷன் மூலம் ஒரு காணொளியை உருவாக்கி, அதன் வழி கதையை சுருக்கமாகச் சொல்வது என முடிவு செய்தேன்.
"15 நிமிடங்கள் ஓடும் அந்த அனிமேஷன் தொகுப்பு நயன்தாராவை வெகுவாக கவர்ந்துவிட்டது. அது தடகள வீராங்கனை குறித்த கதை. அருமையான கதை என்று சொல்லி, தாமே நடித்து, தயாரிக்கவும் முன்வந்தார்.
"எனினும், தடகள வீராங்கனையாக நடிக்க உடல் தோற்றம் முக்கியம். கடுமையாக உழைத்தாலும் அந்த உடல் அமைப்பைக் கொண்டு வர ஆறு மாதங்களாவது ஆகும். அப்போது அவரே என்னை அழைத்து, தம்மால் உடல் அமைப்பை மாற்ற இயலாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார்," என்கிறார் நந்தா.
அதன் பிறகு ஆண்ட்ரியா, தமன்னா என நிறைய பேரிடம் தாம் எழுதிய கதையைச் சொன்னாராம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தால் யாரும் நடிக்க முன்வரவில்லை.
பத்து கோடி ரூபாய் செலவாகும் என்று நந்தா கொடுத்த கணக்கும் தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
அப்போதுதான் இயக்குநர் மனோபாலா மூலமாக இந்தியில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள டாப்சியைச் சந்திக்கும் வாய்ப்பு நந்தாவுக்கு கிடைத்துள்ளது.
"கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே அதில் தாம் நடிப்பது உறுதி என்று கூறினார் டாப்சி. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழிலும் தெலுங்கிலும் நான் இயக்குகிறேன். இந்திக்கு ஏற்றதுபோல் சில மாற்றங்களைச் செய்து தருகிறேன். நீங்கள் படமாக்குங்கள் என்றேன்.
"ஆனால், டாப்சியோ நீங்கள் குறிப்பிடும் தொகை தமிழ், தெலுங்கு திரையுலகுக்கு மிகவும் அதிகம். எந்த தயாரிப்பாளரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். எனவே முதலில் இந்தியில் படமாக்குவோம், பிறகு மற்ற மொழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றார் டாப்சி.
"எனக்கு அதில் உடன்பாடில்லை. அதனால் அந்தச் சந்திப்பின்போது கதையை அவரிடம் ஒப்படைக்காமல் வந்துவிட்டேன். அதன் பிறகு சுமார் ஏழு மாதங்கள் அவர் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தார்.
"நான் அவர் சொன்ன ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளாததால் ஒரு கட்டத்தில் கோபமாகிவிட்டார். 'இப்படியொரு கதையை வைத்துக்கொண்டு ஏன் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்?' என்று உரிமையோடு கோபத்தை வெளிப்படுத்தினார்.
"மேலும் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் தமிழ் படத்துக்கு யாரும் பத்து கோடி முதலீடு செய்ய மாட்டார்கள் என்று டாப்சி தரப்பில் எனக்கு புரிய வைக்கப்பட்டது. அதனால் மனதளவில் சமாதானமடைந்து கதையைக் கொடுத்தேன்.
"35 கோடி ரூபாய் செலவில் படத்தை இந்தியில் 'ராஷ்மி ராக்கெட்' என்ற தலைப்பில் எடுத்தனர். அந்தப் படம் தமிழுக்கு வருவதற்கு முன்பு ஒரு படம் எடுத்துவிடுவோம் என்ற முடிவுடன் `ஆனந்தம் விளையாடும் வீடு' கதையை எழுதி படமாக்கி உள்ளேன்," என்கிறார் நந்தா.
ஒரு நல்ல கதைக்காக இந்தித் திரையுலகினரும் அங்குள்ள முன்னணி நடிகையும் எந்தளவு பொறுமை காக்கிறார்கள், முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை விவரிக்கவே தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லும் நந்தா, பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து தமது படத்தை உருவாக்கி உள்ளாராம். கொரோனா, குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோருக்கும் புரியவைத்துள்ளதாக குறிப்பிடுபவர், தமது படம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்கிறார்.
"நான் சொல்லும் கதையைத் திரையில் பார்க்கும் எவருக்கும் இதயம் கசிந்து, கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீராவது வரும். பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேரும் என நம்புகிறேன்," என்கிறார் நந்தா பெரியசாமி.

