ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ளது 'தி ஜர்னி ஆஃப் பெட்'.
மணிபாரதி இயக்கி உள்ளார்.
சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்க, ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, 'டிக்டாக்' திருச்சி சாதனா, சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைப்படி, ஸ்ரீகாந்த் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளையர். தன் நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்வார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் கொலை அந்த இளையர் குழுவுக்கும் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்பின்னர் அந்த நண்பர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஆபத்துகளும்தான் கதை.
"சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால் அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய்விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் கிட்டத்தட்ட 35 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
"சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடுங்க வைக்கும் குளிரில் அவர் தனித்து நடிக்கவேண்டிய காட்சிகளைப் படமாக்கினோம். கொஞ்சம் கூட சலித்துக்கொள்ளாமல் நடித்தார். ஊட்டியில் மழை பெய்தால், குளிர் அடித்தால் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரே சமயத்தில் இரண்டும் இருந்தால் சமாளிக்க இயலாது. ஆனால் அப்படிப்பட்ட சூழலில்தான் காட்சிகளைப் படமாக்கினோம்," என்கிறார் இயக்குநர் மணிபாரதி.

