கொரோனா காலகட்டத்தில் தாம் நடித்த நகைச்சுவை காட்சிகள் மன அழுத்தத்தில் இருந்து பலர் விடுபட கைகொடுத்ததாகச் சொல்கிறார் வடிவேலு.
நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு திரையுலகில் முடிவு என்பதே இல்லை என்றார்.
நான்கு புதுப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்றும் வடிவேலு கூறினார்.
"நான் கால்வைத்த இடங்களில் எல்லாம் கன்னி வெடிகளை பதுக்கி வைத்தனர். அவற்றில் இருந்து தப்பித்துவிட்டேன். இனி இயக்குநர் சங்கர் படத்திலும் வரலாற்று கதைக்களத்தைக் கொண்ட படங்களிலும் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன்.
"எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், இப்போது சபாஷ் கரணாக மாறிவிட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் என் நன்றி," என்றார் வடிவேலு.
காலஞ்சென்ற விவேக் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் விவேக்கின் இழப்பு மறக்க முடியாத மிகப்பெரும் வேதனை என்றும் கண்கலங்க குறிப்பிட்டார் வடிவேலு.
தாம் நடித்து வரும் புதுப்படத்துக்கு 'நாய் சேகர்' என்ற தலைப்பு நிச்சயம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இப்படத்தில் வடிவேலு ஒரு பாடலைப் பாட உள்ளாராம்.
"விவேக் விட்டுச் சென்ற இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். மீண்டும் நடிக்க இருப்பதைக் கேள்விப்பட்டு லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் எனப் பலர் வாழ்த்து தெரிவித்தனர்," என்று உற்சாகத்துடன் கூறினார் வடிவேலு.
, :

