இயக்குநர் எழில் என்றவுடன் அவரது இயக்கத்தில் உருவான நகைச்சுவைப் படங்கள் தான் சட்டென நினைவுக்கு வரும். இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் தலைப்பு 'யுத்த சத்தம்' என்று அறிவிக்கப்பட்டபோது கோடம்பாக்கத்தில் பலருக்கும் ஆச்சரியம்.
கௌதம் கார்த்திக், பார்த்திபன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இம்முறை நகைச்சுவை மட்டுமல்லாமல், இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இடம் தந்துள்ளதாகச் சொல்கிறார் எழில்.
கௌதம் கார்த்திக் போன்ற துள்ளலும் துடிப்புமான இளையர்கள் நாயகனாக அமைந்தால் எத்தகைய சவாலான கதையையும் படமாக்கிவிட இயலும் என்று பாராட்டுபவர், தமது குருநாதரான பார்த்திபன் தமக்காக முழு உழைப்பையும் தந்திருப்பதாகச் சொல்கிறார்.
நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய கதைதான் இப்போது எழில் இயக்கத்தில் படமாகிறது. நாவலும் 'யுத்த சத்தம்' என்ற தலைப்பில்தான் வெளியானது.
ஒரு கொலைச் சம்பவத்தால் தமிழகத்தில் பரபரப்பு நிலவுகிறது. அது தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரியான பார்த்திபனும் தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த கௌதம் கார்த்திக்கும் களமிறங்குகின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.
கொலை நடக்கிற தருணங்கள் ஒரு மெல்லிய கோடு மாதிரிதான் என்று குறிப்பிடும் எழில், ஒரு தருணம், ஒரு பொழுது, ஒரு சின்னக் கோபம் நம்மை வேறொரு எல்லைக்குக் கொண்டு போய்விடும் என்கிறார்.
இந்தப் படமும் அப்படியொரு கொலையைக் கையிலெடுத்து அலசுகிறது. அதில் உள்ள உண்மை, குற்றச் சூழ்நிலை உருவாகிற விதம் ஆகியவை ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என இப்போதே உத்தரவாதம் வழங்குகிறார் இயக்குநர் எழில்.
"கௌதம் கார்த்திக்கைப் பொறுத்தவரை, நாம் ஒரு விஷயத்தை தெளிவாக விளக்கிச் சொன்னால், அதுவே போதுமானது. அதன் பிறகு அந்தக் காட்சியை தனக்கேற்ப மெருகேற்றி, முடிவில் அது சுவாரசியமாக அமையும்படி பார்த்துக்கொள்வார்.
"கொஞ்சம் கூட சலித்துக்கொள்ளாமல் படப்பிடிப்பின்போது அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது. அவரைப் போன்ற துடிப்பான இளம் நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களைத் தர முடியும்.
"பார்த்திபன் என்னுடைய குருநாதர். அவரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. கோவா திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க நேரிட்டது. 'என்னை வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறாய்' என்று அவரே நேரடியாகக் கேட்டுவிட்டார். அதன்பிறகு 'யுத்த சத்தம்' வேகமாக வளரத் தொடங்கியது," என்கிறார் எழில்.
பார்த்திபனிடம் உதவி இயக்குநராகப் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகச் சொல்பவர், தன் உதவியாளர்களிடம் பார்த்திபன் ஒரு நண்பரைப் போல் பேசிப் பழகுவார் என்கிறார். பார்த்திபனின் அனுபவம் தனது படத்துக்குக் கூடுதல் பலம் என்று குறிப்பிடும் எழில், அந்த அனுபவத்துடன் கௌதம் கார்த்திக் இளமையும் இணைந்திருப்பது ஆகச் சிறந்த கூட்டணி என்கிறார்.
இப்படத்தின் முதல் பாதி முழுவதும் பல்வேறு முடிச்சுகள் விழுமாம். அடுத்த பாதியில் ஒவ்வொரு முடிச்சும் அவிழும் என்றும் அந்தக் காட்சிகள் திகிலூட்டுபவையாக இருக்கும் என்றும் சொல்கிறார்.
"சிறந்த நாவல்களைப் படமாக்கும்போது ஓர் இயக்குநராக என் பணி எளிதாகிறது. அத்தகைய நாவல்களைப் படிக்கும்போதே திரைப்படக் காட்சிகளாக மனதில் ஓடத்தொடங்குகிறது. அங்கும் இங்குமாக சில சிறிய மாற்றங்களைச் செய்தால், அதுவே போதுமானது. முழுக் கதை, திரைக்கதை தயாராகிவிடும்.
"இதுபோன்ற நாவல்கள் நல்ல சினிமா படைப்புகளைக் கொடுக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. நாவலில் சொல்லப்பட்ட கதையை காட்சிப்படுத்த சிறு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளும் எழுத்தாளர்கள் கிடைத்தால் நல்லது. ராஜேஷ்குமார் பெரிய எழுத்தாளர் என்றாலும், இவ்விஷயத்தில் உதவிகரமாக இருந்தார்.
"இந்தப் படம் கௌதம் கார்த்தியின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமையும். படம் விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் எழில்.
கௌதம் கார்த்திக்
, :

