தீபாவளிப் பண்டிகையையொட்டி 'அண்ணாத்த', 'வலிமை' ஆகிய இரு படங்களும் திரை காண்பது உறுதியாகிவிட்டது.
ரஜினி, அஜித் ஆகிய இரு முன்னணி நடிகர்களின் படங்களும் சினிமா ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு முழு வீச்சில் வரவழைக்கும் என கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள 'மாநாடு' திரைப்படமும் தீபாவளி ஓட்டப்பந்தயத்தில் இ்ணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிக விரைவில் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகிறது.
இந்நிலையில் தயாரிப்புத் தரப்புக்கு சிறு சங்கடம் ஏற்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீடு கண்டால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதிலும் கொரோனா நெருக்கடியால் கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வெளியிடுவது நல்லது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தீபாவளியன்று 'மாநாடு' திரைப்படம் வெளியிடப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
"நிறைவான மகிழ்வுடன் 'மாநாடு' படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
"இத்தனை நாள்கள் பேரன்போடு இப்படத்தின் வெளியீட்டுக் காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்," என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
ரஜினி, அஜித் ரசிகர்களை அடுத்து சிம்பு ரசிகர்களும் தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். படத்தைப் பார்த்த சிம்பு, இயக்குநரை வெகு வாகப் பாராட்டியதாகத் தகவல்.

