சமூக வலைத்தளங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சி, திரைப்படப் படப்பிடிப்புகள் என எப்போதுமே பரபரப்பாக வலம் வருகிறார் சாக்ஷி அகர்வால்.
தற்போது 'தி நைட்' என்ற திகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விலங்குகள் சம்பந்தப்பட்ட கதைக்களத்துடன் உருவாகி உள்ளதாம்.
தமிழில் இதுபோன்ற படங்கள் வந்ததில்லை என்பதால் தேடி வந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
எனினும் படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்திக்க நேர்ந்ததாம். முக்கிய காட்சிகளை வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர்.
அதனால் தினமும் அட்டை, வண்டுகள், பூச்சிக்கடிகள் என ஒட்டுமொத்த படக்குழுவும் சிரமங்களைச் சகித்துக் கொண்டு உழைத்துள்ளனர்.
"பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிட்டாலும் தழும்புகள் இன்னும் உள்ளன. இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் திடீரென ஒருநாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி கதையை விவரித்தார்.
"ஓநாய் ஒன்றை நடிக்க வைக்க இருப்பதாகவும் கதைப்படி அதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றும் அவர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இதைக் கேட்ட அடுத்த நிமிடமே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
"கிட்டத்தட்ட நாயகியை மையப்படுத்தும் கதைதான். மொத்த பளுவும் நாயகியின் தோளில்தான் சுமத்தப்பட்டுள்ளது. எனது கதாபாத்திரம் மிகவும் சவால் நிறைந்தது என்பதால் அதிகம் உழைத்திருக்கிறேன்.
"காட்டுப் பகுதியில் தடுக்கி விழுந்தால் சிறு குட்டைகள், குளங்கள்தான் காணப்பட்டன. எனது கதாபாத்திரத்துக்காக ஆழம் தெரியாத குளங்களில் இறங்கி நடித்ததும் படக்குழுவினரின் கடும் உழைப்பும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகமாக்கி உள்ளது," என்கிறார் சாக்ஷி அகர்வால்.
தினமும் காலையில தங்கும் விடுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்ற வனப்பகுதிக்கு நடந்துதான் போகவேண்டுமாம். வாகனங்கள் செல்ல சாலை வசதி கிடையாது. எனவே அதிகாலை எழுந்து, ஒப்பனை போட்டுக்கொண்டு கிளம்பினால் இரவு பத்து மணிக்குத்தான் திரும்ப முடியும். இரவு ஏழு மணிக்கு மேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்.
"நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. இதுதான் உண்மை. இரவு எந்த விலங்கு குறுக்கிடும், நம்மைத் தாக்கும் என்று தெரியாது.
"எனினும் படம் சிறப்பாக உருவாகி இருப்பதாக இயக்குநர் சொன்னபோது அந்தக் கடினமான பொழுதுகளில் நாம் கடுமையாக உழைத்தது வீண்போகவில்லை என்ற நிம்மதியும் மன நிறைவும் ஏற்படுகிறது," என்று சொல்லும் சாக்ஷி, அடுத்து பிரபுதேவாவுடன் 'பகீரா', எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நான் கடவுள் இல்லை', சுந்தர்.சி.யின் 'அரண்மனை 3' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் திரையுலகில் அறிமுகமாகி சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தமக்கென எந்தவிதமான இலக்குகளையும் நிர்ணயிக்கவில்லை என்பவர், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால், உணர்ந்தால், அதுவும் வளர்ச்சிக்குரிய நாள்தான் என்கிறார்.
"நமது வாழ்க்கைப் பயணம் என்பது கற்றலுக்கான தளம். 'தி நைட்' படத்தில் உணர்வுபூர்வமான ஒரு காட்சியில் அனாயாசமாக ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஒன்பது ஆண்டுகால அனுபவம்தான் இதற்குக் காரணம்.
"வெற்றி, தோல்வி என்பது அவரவர் பார்வையில் மாறுபடும்.
"ஒவ்வொரு படத்திலும் எனக்குள் சில மாற்றங்கள் நிகழ்வதை உணர முடிகிறது," என்று சொல்பவர், நடிகர் தனுஷின் வளர்ச்சி தம்மை பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார்.

