'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற அழகான தலைப்புடன் களமிறங்கி உள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி. கூட்டுக் குடும்பத்தால் விளையும் நன்மைகளைக் கூற வரும் மற்றொரு தமிழ் படம்.
இப்படத்துக்கான முதல் புள்ளி தன் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கியது என்கிறார் நந்தா.
"அண்ணன், தம்பி இருவரும் நல்லவர்களாக இருந்தாலும் நடுவில் இருந்த சிலர் அவ்வப்போது கொம்பு சீவி, கடைசியில் இருவருக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிட்டனர். இப்படி என்னுடைய அக்காவின் கணவருக்கும் அவருடைய அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக இந்தப் படம் உருவாகி உள்ளது," என்கிறார் நந்தா பெரியசாமி.
கௌதம் கார்த்திக், சேரன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நட்சத்திர தம்பதியரான டாக்டர் ராஜசேகர், ஜீவிதாவின் மகள் ஷிவாத்மிகா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பல மூத்த, அனுபவ நடிகர்கள் என 35 ஐந்து கதாபாத்திரங்களுடன் படம் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகும் உருவாகி உள்ளது இப்படம்.
"முக்கியமான ஓர் இலக்கை நோக்கி கதை பயணப்படும். அந்த இலக்கு என்ன என்பது ரகசியம். பிரிந்த உறவுகளை இணைப்பதற்காக இரண்டு குடும்பங்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்கின்றன. இறுதியில் இலக்கை அடைகிறார்களா என்பதை எல்லாம் திருவிழாக்களில் தோரணங்கள், வண்ண விளக்குகள் கொண்டு அனைத்தையும் அலங்கரிப்பது போல் ரசிக்கும்படி காட்சிப்படுத்தி உள்ளோம்.
"கெளதம் கார்த்திக் எனக்கு கதாநாயகனாக வாய்த்தது எனது அதிர்ஷ்டம். மூன்று மணி நேரம் நான் சொன்ன கதையைப் பொறுமையாகக் கேட்டார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல். படிப்பை முடித்து, தன் சித்தாப்பாவுக்கு துணையாக இருக்கும் இளையர். வீட்டுக்கு வெளியே பாயும் புலி என்றால் பெரியவர்கள் முன்பு பணிவு காட்டுவார்.
"கௌதமை இயக்குநர்களின் குழந்தை என்பேன். காரணம், இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்வார், அதையும் நூறு விழுக்காடு சரியாகச் செய்வார். பார்க்க வெளிநாட்டுக்காரர் போன்று இருந்தாலும் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பேசுகிறார். அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது.
"இயக்குநர் சேரன் இப்படத்தின் மற்றொரு பலம். மொத்த கதையும் அவரைச் சுற்றித்தான் நடக்கும். கதை பிடித்த காரணத்தால் மட்டுமே நடிக்க சம்மதித்தார்," என்கிறார் நந்தா பெரியசாமி.
அறிமுக நாயகி என்றாலும் தயக்கம் இன்றி நடிக்கிறாராம் ஷிவாத்மிகா. நடிகைகள் ஷோபா, ஊர்வசி, அஞ்சலி, அபர்ணா பாலமுரளி வரிசையில் இவருக்கும் இடம் கிடைக்கும் என்பது நந்தாவின் கணிப்பு கலந்த பாராட்டு. ஆந்திராவில் வளர்ந்தவர் என்றாலும் ஷிவாத்மிகா தமிழில் தெளிவாகப் பேசுகிறார்.
"டேனியல் பாலாஜிதான் இதில் வில்லன். வசனங்களை முணுமுணுப்பது போல்தான் நமக்குத் தோன்றும். இதுகுறித்து கேட்டால் பின்னணிக் குரல் பதிவின்போது பார்த்துக் கொள்வோம் என்பார். ஆனால் 'டப்பிங்' பணி முடிந்தபிறகு காட்சியைப் பார்த்தால் கச்சிதமாக இருக்கும். அவரது முகபாவனைகள் எப்போதுமே மிரட்டல்தான்.
"சினேகன், சரவணன், சௌந்தரராஜா, நமோ நாராயணா, மொட்டை ராஜேந்திரன், மௌனிகா, மதுமிதா உட்பட அனைவருக்குமே மனதில் நிற்கும் பாத்திரங்கள் அமைந்துள்ளன" என்கிறார் நந்தா.
, : .