நடிகை கங்கனா ரணாவத்தின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை என்கிறார் அரவிந்த்சாமி. இவரும் கங்கனாவும் நடித்துள்ள 'தலைவி' படம் அண்மையில் வெளியீடு கண்டது.
அதில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் ஜெயலலிதாஆவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளனர். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது என்கிறார் அரவிந்த்சாமி.
"நான் சிறு வயது முதல் எம்ஜிஆரைப் பார்த்து வளர்ந்தவன். இதனால் சில விஷயங்களை என்னால் சுயமாக யோசித்து செய்ய முடிந்தது. ஆனால் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்த கங்கனாவுக்கு அப்படியல்ல. அவருக்கு மொழி தெரியாது. தமிழகத் தலைவர்கள் குறித்தும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
"இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜெயலலிதாவாக திரையில் நடிக்க வேண்டும் என்றால் அவர் எந்த அளவுக்கு தம்மை தயார்ப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்போது அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என பலர் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் எந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி இருப்பார் என யோசிக்கிறேன். கங்கனாவின் சினிமா வாழ்க்கையில் 'தலைவி' சிறந்த பரிசு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை," என்கிறார் அரவிந்த்சாமி.
எம்ஜிஆராக நடிக்க தானும் சில சவால்களை சந்திக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்பதை நன்கு யோசித்துதான் முடிவு செய்துள்ளார். இவ்வாறான யோசனையும் தயக்கமும் மனதில் ஏற்பட்டாலே அந்தப் படத்தில் நடித்தே ஆவது என முடிவு செய்துவிடுவாராம்.
"எம்ஜிஆர் கதாபாத்திரம் சவாலான ஒன்றாக இருக்கும் என்று மனதில்பட்டதும் நடிப்பதாகச் சொல்லிவிட்டேன். எனினும் அடுத்த இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார் இயக்குநர். நான் தயங்கவில்லை. சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த ஒரு தலைவராக திரையில் தோன்றுகிறேன். அவர் உடல்மொழியை தேவையான இடங்களில் வெளிப்படுத்த இயலும் என நம்பினேன்.
"மேலும், இதில் உணர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருந்ததே தவிர, எம்ஜிஆரை அப்படியே பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் எழவில்லை. என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் வேடத்தில் நடிப்பதே சவால்தான். அதைக் கடந்து வந்திருப்பதில் நெகிழ்ச்சி. குறிப்பாக, உயிரற்ற உடலாக படுத்திருந்தபோது மனதுக்குள் ஓடிய உணர்வுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை," என்கிறார் அரவிந்த்சாமி.
தமது இருபத்து ஐந்தாவது வயதில், அச்சமயம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இருந்து கலைமாமணி விருது பெற்றதாக நினைவுகூர்பவர், விருதளித்த பின்னர், மேலும் பல விருதுகளைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் வாழ்த்தியதாகச் சொல்கிறார்.
பின்னர் சினிமாவில் இருந்து விலகி தொழில்துறையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு தொழிலதிபராக மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், 'எதற்காக சினிமாவில் நடிக்காமல் விலகிச் சென்றீர்கள். மீண்டும் நடிக்க வாருங்கள்' என்று ஜெயலலிதா தமக்கு அறிவுரை கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு வகையில் ஜெய லலிதா அவரது தாய்மைக குணத்தை வெளிப்படுத்தியதாகத் தமக்கு தோன்றுகிறது என்றும் சொல்கிறார்.
திரைப்பட இயக்குநராக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வலுவாக பதிந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், சில கதைகளை தயார் நிலையில் வைத்துள்ளாராம்.
"அவற்றுள் ஒன்று காதல் கதை. அதை இயக்க வேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது. வாய்ப்பும் சூழ்நிலையும் சரியாக அமைந்தால் அந்தக் கதையைத்தான் முதலில் பட மாக்குவேன்.
"கோபம் என் உடன் பிறந்த குணம் எனலாம். மிக எளிதில் கோபப்பட மாட்டேன். அப்படி வந்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். கோபத்தால் நான் இழந்தது அதிகம். பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தான் என்றாலும் அதை நாம் நியாயப்படுத்துவது முறையல்ல. அதைத்தான் நான் 'ரவுத்திரம்' படத்தில் சொல்ல நினைத்தேன். அது சிறப்பாக வந்திருப்பதாக பெரிய இயக்குநர்கள் பாராட்டும்போது மனநிறைவு ஏற்படுகிறது," என்கிறார் அரவிந்த்சாமி.