நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே சவாலான கதாபாத்திரங்கள் தம்மைத் தேடி வருவதாகச் சொல்கிறார் நடிகை மிருணாளினி.
'ஜாங்கோ' என்ற புதுப் படத்தில் செய்தியாளர் பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது ஊடகத் துறை குறித்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டதாக குறிப்பிடுபவர், ஒரு செய்தி நிறுவனம், தொலைக்காட்சி அலைவரிசை உள்ளிட்டவை எவ்வாறு செயல்படும் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.
கதைப்படி, இவரை சமூக விரோதிகள் சிலர் கடத்திச் செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து மிருணாளினி தப்பிக்க முயற்சி செய்யும் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது.
"என்னைச் சுற்றி வளைக்கும் நான்கு அடியாட்கள் ஒரு வாகனத்தில் என்னைத் திணித்து எங்கோ அழைத்துச் செல்வார்கள். அதில் நடித்த நான்கு சண்டைப்பயிற்சி கலைஞர்களும் என்னைவிட இரண்டு அடி அதிக உயரமாக இருந்தனர். பார்த்தாலே கிலி அதிகரித்துவிடும்.
"உண்மையில் அவர்களுடன் நடிக்க பயந்தேன். ஆனால், காட்சி படமாக்கப்பட்டதும் நிலைமை தலைகீழாகிவிட்டது. இயக்குநர் 'கட்' என்று சொன்ன அடுத்த நொடியே நான்கு பேரும் வேகமாக என்னை அணுகி நலம் விசாரித்தனர்.
"என்னைக் கடத்தும் காட்சியில் முரண்டு பிடிக்கும் என்னை வாகனத்துக்குள் வேகமாக தள்ளிவிட வேண்டும். இதனால் எனக்கு அடிபட்டு இருக்குமோ என்று அவர்களுக்கு கவலை. முரட்டுத் தோற்றம் கொண்ட அவர்களது அன்பும் அக்கறையும் என்னை நெகிழ வைத்தது.
"அதன் பிறகு அதே வாகனத்தில் அமர்ந்துகொண்டு அவர்களுடன் அரட்டை அடிக்கும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது.
"இதைக் கண்டு படக்குழுவில் இருந்த சிலர், 'இந்த பொண்ணு கடத்தியவர்க ளிடமே பேசிக் கொண்டிருப்பதைப் பாருங்க' என்று கிண்டல் செய்தனர்.
"இதன் பிறகுதான் முரடர்கள் போல் காட்சி அளிக்கும் பலரிடம் குழந்தை உள்ளம் இருக்கும் என்று அனுபவசாலிகள் சொல்வது எந்த அளவு உண்மை என்பது புரிந்தது," என்கிறார் மிருணாளினி.
செய்தியாளர் வேடத்தில் நடித்தது உற்சாகம் அளித்ததாகவும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறுகிறார்.
"துணிச்சலான பெண் செய்தியாளராக நடித்துள்ளேன். சமூக விரோதிகளுக்கு கொஞ்சம்கூட பயப்படாமல் அவர்களுடைய இருப்பிடத்துக்கே சென்று மோதுவேன். சில காட்சிகளை சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகத்திலும் அரங்கிலும் படமாக்கினோம்.
"இரவு நேரலை முடிந்து ஊழியர்கள் கிளம்பிய பிறகே படப்பிடிப்பு தொடங்கும். பிரமாண்டமான செய்தி அறையில், கேமராக்கள் சூழ்ந்திருக்க, பெரிய திரையில் காட்சிகள் விரிய, அறையின் மையப்பகுதியில் அமர்ந்து வசனங்களைப் பேசி நடித்தபோது, உண்மையாகவே நானும் செய்தியாளராக நடிக்கும் உணர்வு ஏற்பட்டது," என்கிறார் மிருணாளினி.
படப்பிடிப்பின்போது பல்வேறு சுவாரசியங்கள் அரங்கேறினவாம். அவற்றை நினைத்துப்பார்த்தால் இப்போதும்கூட சிரிப்பு வருவதாகச் சொல்கிறார்.
கதைப்படி, எதிரிகள் மிருணாளினியைச் சுட்டுவிடுவார்களாம். இதையடுத்து அவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்வது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
"அதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. காட்சி முடியும்வரை கண்களை மூடி படுத்திருக்க வேண்டும், அவ்வளவுதான்.
"அந்தக் காட்சி எடுக்கப்பட்ட போது என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். காட்சி படமானதும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிய படக்குழுவினர், 'படப்பிடிப்பு முடிந்துவிட்டது, வீட்டுக்குப் போய் தூங்குங்கள்' என்று கிண்டல் செய்தனர்.
"வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதே சமயம் வணிகப் படங்களில் நடித்தால்தான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய முடியும் என்பதையும் உணர்ந்துள்ளேன். அவற்றிலும் கவனம் செலுத்துவேன்," என்கிறார் இளம் நாயகி மிருணாளினி.
சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வரும் இவருக்கு, தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
எனினும், கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகே மற்ற வாய்ப்புகளை ஏற்பது என முடிவு செய்துள்ளாராம் மிருணாளினி.

