'சந்திரமுகி 2'ல் அனுஷ்கா, வடிவேலு
'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்காவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
'சந்திரமுகி 2' படத்தின் கதை முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனத் தகவல். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிப்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் அனுஷ்காவிடம் பி.வாசு கதையை விவரிக்க, அவரும் படத்தில் நடிக்கும் ஆவலை வெளிப்படுத்தி உள்ளார். எனினும் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஜனவரி மாதம் முதல்தான் படப்பிடிப்பில் பங்கேற்க இயலும் என நிபந்தனை விதிக்கிறாராம் அனுஷ்கா.
மேலும், வடிவேலுவையும் அணுகியுள்ளதாம் தயாரிப்புத் தரப்பு. அவரும் பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரக்கூடும்.
பரிசு தந்து அசத்திய வரலட்சுமி
தன்னிடம் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பனைக் கலைஞர் ரமேஷுக்கு கார் வாங்கிப் பரிசளித்துள்ளார் நடிகை வரலட்சுமி.
இதுகுறித்து டுவிட்டடரில் பதிவிட்டுள்ள அவர், ரமேஷின் பிறந்த நாளையொட்டி இந்தப் பரிசை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் எனது ஒப்பனை நாயகன் மட்டுமல்ல, எனது வலது கையும் கூட. நீங்கள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் அளித்துள்ள பிறந்த நாள் பரிசு பிடிக்கும் என நம்புகிறேன்," என தமது பதிவில் மேலும் கூறியுள்ளார் வரலட்சுமி. அவரது இச்செயலைப் பலர் பாராட்டி உள்ளனர்.

