'சர்வைவர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றுள்ளார் நடிகர் விக்ராந்த்.
இயல்பாகவே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தினமும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடிய நடிகர்களில் விக்ராந்தும் ஒருவர்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போதே மனிதர் விளையாட்டிலும் சாதிக்க விரும்பியுள்ளார் என்பது நன்றாகத் தெரியும்.
'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பாராம் விக்ராந்த். அவருக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்ததும் உற்சாமாகிவிட்டார் என்கிறார் விக்ராந்தின் மனைவி மானசா.
என்னதான் வாய்ப்பும் அழைப்பும் தேடிவந்தாலும், நீண்ட யோசனைக்குப் பிறகு பங்கேற்ற ஒப்புக் கொண்டுள்ளார்.
"வீட்டில் மற்றவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட சாகச நிகழ்ச்சியில் நிஜமாகவே பங்கேற்று தாக்குப்பிடிக்க முடியுமா என்கிற பயம் அவருக்கு இருந்தது. தவிர இரண்டு மகன்களையும் அவர் இதுவரை பிரிந்ததே இல்லை.
"பெரிய மகனுக்கு 11 வயதும் இளைய மகனுக்கு ஐந்து வயதும் ஆகிறது. இருவரையும் பார்க்காமலும் பேசாமலும் எப்படி நாள்களைக் கடத்தப் போகிறாரோ, தெரியவில்லை. தவிர, திருமணமான இத்தனை ஆண்டுகளில் நானும் அவரைப் பிரிந்தது கிடையாது. அதனால் இந்தப் பிரிவு கடுமையானதாக உள்ளது," என்கிறார் மானசா.
கடந்த 12 ஆண்டுகளில் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள், இதர வேலைகள் என விக்ராந்த் எங்கு சென்றாலும் இவரும் உடன் இருப்பாராம். ஒருவேளை போக முடியவில்லை என்றால் தினமும் காணொளி அழைப்பின் மூலம் இருவரும் பேசி விடுவார்களாம்.
"குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பாவது இருக்கும். ஆனால் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு இருக்காது என்பது கடினமான ஒன்றாக உள்ளது," என்கிறார் மானசா.
தன் கணவர்தான் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இல்லை என்பவர், மக்களுடன் நெருக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என்பதால்தான் விக்ராந்த் பங்கேற்றதாகச் சொல்கிறார்.
இவர்களது மூத்த மகன், "அப்பா... சீக்கிரம் வந்துவிடுங்கள்," என்று சொல்லி வழியனுப்ப, இளைய மகனோ, "அப்பா... வெற்றியோடு திரும்புங்கள்," என்று கூறியுள்ளனர்.
"ஊரடங்கின்போது படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டார். அதனால் அவரது பிரிவு குழந்தைகள் மனதிலும் ஏக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
"விக்ராந்த் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதேபோல் நீச்சலிலும் கெட்டிக்காரர். விளையாட்டு, போட்டி என்று வந்துவிட்டால் முழு வேகத்துடன் ஆவேசமாகச் செயல்படுவார். அப்படிப்பட்டவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீந்துவதற்கு சிரமப்பட்டார் என்பதை நம்ப முடியவில்லை.
"தவிர எந்தவொரு விஷயத்திலும் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார். பிரச்சினைகள் தோன்றும்போது இறுதிவரை போராடுவார். கொரோனா விவகாரத்தால் மக்களுடனான தொடர்புகள் அறவே இல்லாமல் போய்விட்டது. அந்த இடைவெளியை நிரப்ப இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும்.
"என் கணவர்தான் வெற்றிபெற வேண்டும் எனும் பேராசை எல்லாம் இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நல்லது நடந்தால் சரி. இல்லையேல் எதிர்பார்ப்புகள் இல்லாததால் ஏமாற்றமும் இருக்காது," என்கிறார் மானசா.

