அறவே ஒப்பனை இல்லாமல் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.
இதன் மூலம் தாம் எண்ணிக்கைக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே நடிக்க வந்திருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார்.
'ஜோக்கர்', 'ஆண் தேவதை' படங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார் ரம்யா.
இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நல்ல கதை, சிறந்த நிறுவனம் ஆகியவற்றுக்காக காத்திருப்பதில் தவறில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகள் மழையாகக் கொட்டும் என்று எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நடக்காதது சிறிய ஏமாற்றத்தை அளித்தாலும், தாம் துவண்டுபோகவில்லை என்கிறார்.
"நான் எப்போதும் எதற்காகவும் தளர்ந்துவிட மாட்டேன். இதற்கு முன்பு 'ஜோக்கர்' படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, என் மீது வெளிச்சம் விழும், அதன் மூலம் வாய்ப்புகள் தேடிவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
"அதன் பிறகு 'ஆண் தேவதை' படத்தில் நடித்தேன். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, தரமான படமாக இருந்தும் அது ரசிகர்களைப் பரவலாகச் சென்றடையவில்லை," என்கிறார் ரம்யா.
அதன் பின்னர் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டாராம். பின்னர் திரைக்கதை அமைக்கும் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதையெல்லாம் கேள்விப்பட்ட விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் ரம்யாவைத் தொடர்பு கொண்டு 'குக் வித் கோமாளி', 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட அழைத்துள்ளனர்.
"அதுவும் கூட நல்ல அனுபவம்தான். இப்போது நான் எதிர்பார்த்தது போலவே நல்ல கதாபாத்திரங்கள் அமையத் தொடங்கிவிட்டன. கதையுடன் எத்தகைய குழு அமைகிறது என்பதும் முக்கியம். அதிலும் கவனம் செலுத்துகிறேன்," என்று சொல்லும் ரம்யா, அடுத்து 'இடும்பன்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இரண்டு பெண்களின் கதையாக உருவாகிறதாம். மேலும் ஓர் இணையத் தொடரிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படக்குழுவினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, சிவகங்கை பக்கத்தில் படப்பிடிப்பு நடக்கவிருந்த மல்லல் எனும் கிராமத்துக்குச் சென்று முகாமிட்டுள்ளனர்.
"அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தங்க வைத்தார் இயக்குநர். தினமும் இரண்டு மாடுகளைப் பராமரிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும் என்றார்.
"தினமும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தீவனத் தண்ணீர் காட்டுவது, பிறகு கடலை மிட்டாய் கொடுப்பது என்று அந்த மாடுகளுடன் பழகத் தொடங்கினேன். நடிப்புக்காக மேற்கொண்ட பயிற்சி என்றாலும், அதன் வழி பலவற்றைத் தெரிந்துகொண்டேன்," என்கிறார் ரம்யா.
இவர் நிலைமையாவது பரவாயில்லை. இந்தப் படத்தில் இவரது கணவராக மிதுன் மாணிக்கம் சுமார் ஆறு மாதங்கள் அந்த மாடுகளுடன் பழகினாராம். அவற்றைக் குளிப்பாட்டி, உணவு வைத்து, மேய்ச்சலுக்கு அழைத்துப்போவது என்று மாட்டுக்கொட்டிலிலேயே வாழ்ந்திருக்கிறார்.
"அவ்விரு காளை மாடுகளும் இந்தப் படத்தில் மவுன சாட்சிகள் போல் வருகின்றன. ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்வாரோ, அதற்கு சற்றும் சளைக்காமல் நான் அவற்றைக் கவனித்துக் கொண்டேன். படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஒரு மாத காலம் அவற்றுடன் தங்கி இருந்ததால், அந்த மாடுகளுக்கும் எனக்கும் மத்தியில் ஒருவித பாச வளையம் உருவாகிவிட்டது," என்கிறார் ரம்யா.
தாம் சொல்வது எந்த அளவு உண்மை என்பதை ரசிகர்களால் இப்படத்தைப் பார்க்கும்போது உணர முடியும் என்பவர், இந்தப் படத்தில் 'வீராயி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு நடித்த 'ஜோக்கர்' படத்திலும் ரம்யாவுக்கு கிராமத்துப் பெண் வேடம்தான். ஆனால் அதில் வசனங்கள் குறைவு. இந்தப் படத்தில் ஓயாமல் பேசுவாராம்.
இது மிருக வதை சம்பந்தப்பட்ட கதை அல்ல. குழந்தைகள் இல்லாத கிராமத்து தம்பதியர், இரண்டு காளை மாடுகளை வெள்ளை, கறுப்பு என்று பெயர் வைத்து தங்கள் குழந்தைகள் போல் பாசத்துடன் வளர்க்கிறார்கள்.
ஒருநாள் எங்கள் மாடுகள் காணாமல் போகின்றன. அவற்றைத் தேடி அலையும்போது, இந்த விவகாரம் அரசியலாக மாறுகிறது. இதனால் முந்தைய நாள் வரை அறியப்படாத, கண்டுகொள்ளப்படாத ஒரு வறட்சியாக இருந்த அந்தக் கிராமத்தை நோக்கி ஊடகங்கள் ஓடி வருகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதையாம்.