கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் புரிந்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கோடம்பாக்கத்தில் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள், பொது மக்கள் என அனைவருடனும் நெருக்கமாகி வருகிறார்.
ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ள 'ஃபிரண்ட்ஷிப்' படத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் தான். ஏற்கெனவே, 'டிக்கிலோனா' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ள இவர், இப்போது நாயகனாக மாறியுள்ளார். நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகியாக நடித்துள்ளார் லாஸ்லியா.
"இது காதலும் நட்பும் நிறைந்த கதை. என் காதலியாக லாஸ்லியாவும் நண்பராக சதீஷும் நடித்துள்ளனர். அர்ஜுன்தான் வில்லன்.
"இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க ரசிகர்களும் சமூக வலைத்தளங்களும்தான் காரணம். டுவிட்டர் உள்ளிட்ட சில தளங்கள் மூலம் தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.
"சினிமா எனது முழு நேர தொழில் அல்ல. ஒன்றிரண்டு வாய்ப்புகள் தேடிவந்தபோது, முயற்சி செய்து பார்க்கலாம் எனத் தோன்றியது. அதன்படி இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்," என்று சொல்லும் ஹர்பஜனுக்கு, தமிழில் ரஜினியும் விஜய்யும்தான் பிடித்த நடிகர்கள்.
கதாநாயகனாக நடிக்கக் கேட்டு தம்மை அணுகியபோது முக்கிய நிபந்தனை விதித்தாராம். அது, நேரந்தவறாமை. எக்காரணத்தைக் கொண்டும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பது சிறு வயது முதலே தாம் கடைப்பிடித்து வரும் கொள்கை என்கிறார்.
வீணடிக்கப்படும் நேரத்தில் எத்தனையோ காரியங்களைச் செய்ய முடியும் என்று சொல்பவர், தமிழக மக்களின் அன்பு தம்மை நெகிழ வைப்பதாகச் சொல்கிறார்.
தமிழ்நாட்டு இட்லியும் தோசையும் தமக்குப் பிடித்தமான உணவு வகைகளாக மாறிவிட்டன என்றும் சென்னை வந்தால் அவற்றைத்தான் அதிகம் சாப்பிடுவதாகவும் கூறுகிறார். ஹர்பஜனுக்கு தமிழில் சில வார்த்தைகள் தெரியும். வணக்கம், சாப்பிட்டீர்களா, நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குகிறார்.
இதைவிட முக்கியம், இந்தச் சாதனை வீரருக்கு சில திருக்குறள்களும் தெரியும். தமிழகத்தில் அவருக்கு நெருங்கிய நண்பரான சரவணன் என்பவர்தான் கற்றுக்கொடுத்துள்ளார்.
"எனது டுவிட்டர் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். அதற்கு சரவணன்தான் காரணம். எந்தவொரு பதிவாக இருந்தாலும், என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வார்.
"அண்மையில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படம் பற்றியும் அந்த சைக்கிள் வாத்தியார் குறித்தும் என்னிடம் விவரித்த பிறகே, 'சைக்கிளில் ஒரு ரவுண்டு கிடைக்குமா' என்ற டுவிட் போடப்பட்டது. ஏராளமானோர் அதை ரசித்தனர்.
"படங்களைத் தேர்வு செய்வதற்கு எந்தவித அளவுகோலும் என்னிடம் இல்லை. அண்மைக் காலமாக நான் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை. எனவே நிறைய நேரம் இருப்பதாகத் தோன்றியது. அந்த அடிப்படையில்தான் சினிமாவில் நடிக்கலாம் என முடிவு செய்தேன்.
"நாம் எதற்காக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் எனும் கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.
"என் மனதுக்கு சரியெனப்பட்டால் நடிப்பேன், அவ்வளவுதான்," என்று சொல்லும் ஹர்பஜனுக்கு, நடிகர் சதீஷம் சில தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொடுத்தாராம்.
ஆனால் அவை அனைத்தும் வசவு வார்த்தைகள் என்பதால் யாரிடமும் பயன்படுத்த முடியவில்லை என்று புன்னகைக்கும் ஹர்பஜன், தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
"தமிழ் சினிமாவில் நட்பும் அன்பும் கேட்காமலேயே கிடைக்கிறது. தமிழ்ப் படங்கள் யதார்த்தமான படைப்புகளாக உள்ளன. எல்லோருமே நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உழைக்கின்றனர். இங்கு கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன," என்கிறார் ஹர்பஜன்.

