அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை இணைத்து பல சுவரொட்டிகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து இத்தகைய சுவரொட்டிகளைத் தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் எச்சரித்துள்ளது.
“ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது,” என்று விஜய் மக்கள் இயக்கம், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விஜய்யின் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள அந்த இயக்கம், அரசியல் கட்சி அல்ல என்று அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விஜய் குறிப்பிட்டார். மேலும் தம் பெயரையோ புகைப்படத்தையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறினார்.
இருந்தபோதும், அவருக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக அவரது திரைப்படக் கதைகள் காட்டுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரை எம்ஜிஆராகவும் ஜெயலலிதா ஆகவும் சித்திரிக்கும் சுவரொட்டி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.