'கொற்றவை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சந்தனா ராஜ்.
சொந்த ஊர் கேரளா. பள்ளி, கல்லூரிப் படைப்பை முடித்த பிறகுதான் சினிமா குறித்து யோசித்ததாகச் சொல்கிறார். குடும்பத்தில் வேறு யாருக்கும் சினிமா துறையில் தொடர்பில்லை.
சந்தனா தமிழில் நடித்த முதல் படம் 'ஒத்தைக்கு ஒத்தை'. அது இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்த வாய்ப்பு தேடிவர, தயக்கமின்றி ஒப்புக்கொண்டாராம்.
"என் தந்தை ஒரு தொழிலதிபர். பங்குச்சந்தை விவகாரங்களைக் கையாள்வதில் மிகுந்த திறமைசாலி. 'பங்குச்சந்தை புலி' என்றுதான் அவரை நண்பர்கள் அழைப்பார்கள். அம்மா வழக்கறிஞராக உள்ளார்.
"சிறு வயதில் இருந்தே எனக்கு மாடலிங், சினிமாவில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்புதான் முக்கியம் என்று பெற்றோர் கூறிவிட்டதால், அதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
"படிப்பை முடித்த பின்னர் சொந்த முயற்சி மூலம் மாடலிங் துறையில் கால்பதித்தேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது," என்று சொல்லும் சந்தனா, சினிமா ஆர்வம் காரணமாக முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்துள்ளார்.
அவர் பேசும் தமிழும் நடனத்தில் பெற்றுள்ள தேர்ச்சியும்தான் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. 'ஒத்தைக்கு ஒத்த' படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்ததாகச் சொல்கிறார்.
"இயக்குநர் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகிறது 'கொற்றவை'. தமிழ் தெரிந்த கதாநாயகியைத் தேடுவதாகக் கேள்விப்பட்டு, நானும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். தமிழில் சில வசனங்களைப் பேசுமாறு கேட்டுக்கொண்டனர். தமிழ், தமிழர்கள் வரலாறு, ஆதிக் குடிமக்கள் என்ற கோணத்தில் கதை சொல்கிறார்கள்.
"இந்தப் படத்தில் எனக்கு அமைந்திருப்பது கனவுக் கதாபாத்திரம் என்று கூறலாம். அந்த அளவுக்கு மிக அழகான, சவாலான கதாபாத்திரம் என்பேன். என் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட கிடைத்த அற்புதமான வாய்ப்பாகக் கருதுகிறேன்.
"எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அது நமக்கு பெயர் வாங்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும். நல்ல கதைக்களம்தான் நம்மை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்," என்று சொல்லும் சந்தனாவுக்கு அனைத்து கதாநாயகர்களுடனும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.
கதாநாயகர்களில் மனம் கவர்ந்தவர் என்று குறிப்பிட்டுச் சொல்ல யாரும் இல்லை. நல்ல படத்தில், நன்றாக நடித்துள்ள அனைவருமே தமக்குப் பிடித்தமானவர்கள் என்கிறார்.
"நடிகைகளில் மட்டும் இருவரை ரொம்பப் பிடிக்கும். ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு நான் அடிமை. அவர் திரையில் தோன்றும்போது என்னையே மறந்துவிடுவேன்.
"அதற்கு அடுத்து நயன்தாராவின் நடிப்பும் தன்னம்பிக்கையும் ரொம்பப் பிடிக்கும்.
"தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் என் திறமை நன்கு வெளிப்படும். பிற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன். எனினும் தமிழுக்குத்தான் எப்போதும் முதலிடம்," என்கிறார் இளம் நாயகி சந்தனா ராஜ்.