பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் அமைதியாக இருந்துவிடக் கூடாது என வலியுறுத்தி உள்ளார் ஜோதிகா.
இது தொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஒன்பது வயதுச் சிறுமியை அவரது 48 வயது உறவினர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து தன் தாயிடம் சொன்னதை அடுத்து, அந்த உறவினர் சிக்கினார். பின்னர் நடந்த வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படக்குழுவினருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
இந்நிலையில், இன்ஸ்டகிராம் பதிவில், "பெண்கள் அமைதியைத் தகர்த்தெறியுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் தன்னையறியாமல் அனைத்து பெண்களுக்காகவும் நிற்கிறாள்," என்று குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.

