"அனபெல் சேதுபதி' படம் குறித்து ரசிகர்கள் எவ்வளவு காலம் பேசுவார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்தப் படத்தை என்னால் மறக்க இயலாது. அதற்குக் காரணம் விஜய் சேதுபதி," என்கிறார் நடிகை டாப்சி.
ஏனெனில் பொதுவாக நடிகர்களை மையப்படுத்தியே இயங்கும் சினிமா உலகில் நாயகியை முன்னிலைப்படுத்தும் வகையில் தலைப்பு வைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
"இது விஜய் சேதுபதியுடன் நான் இணைந்து நடித்த முதல் படம். தமிழில் முன்னணி நடிகராக உள்ள போதிலும், பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்.
"மேலும் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்தும் அளிக்கும் திரைக்கதை என்பது தெரிந்தும் படத்தலைப்பில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை அறிந்தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.
"என் திரைப்பயணத்தில் இதுவரை இப்படிப்பட்ட நடிகரை சந்தித்தது இல்லை. அதனால் அவருடன் இணைந்து நடிக்க விரும்பினேன்," என்கிறார் டாப்சி.
'அனபெல் சேதுபதி' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இனி இதுபோன்ற திகிலும் நகைச்சுவையும் கலந்துள்ள கதைகளில் தம்மை பார்்க்க இயலாது என்று சொல்லும் டாப்சி, திகில் கதைகளில் நடிப்பதில் தமக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்கிறார். பிறகு எதற்காக 'அனபெல் சேதுபதி'யில் நடித்தார் என்ற கேள்விக்கும் அவரது பதில் தயாராக உள்ளது.
"இதற்கு முன்பு தமிழில் 'காஞ்சனா-2', தெலுங்கில் 'அனந்தோ பிரம்மா' ஆகிய இரு திகில் படங்களில் நடித்துள்ளேன். தொடக்கத்தில் இரு படங்களிலும் நடிக்க விருப்பமில்லை என்று கூறியதே உண்மை. காரணம், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் எனக் கருதினேன். ஆனால் இவற்றின் திரைக்கதைகள் மனத்தைக் கவரும் வகையில் இருந்தன. அதனால்தான் ஒப்புக்கொண்டேன்.
"மேலும், இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் நான்தான் நாயகியாக நடிக்கவேண்டும் என்று முடிவு செய்து, என்னிடம் மட்டுமே கதையை விவரிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இதை அறிந்ததும் அவரை அழைத்து கதை கேட்டேன். கற்பனையும் நகைச்சுவையும் கூடிய கதை என்னைக் கவர்ந்தது," என்கிறார் டாப்சி.
எத்தகைய அடிப்படையில் படங்களை ஒப்புக்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் பதில், "எதற்காக நான் ஒரு திரைப்படத்தைப் பணம் கொடுத்துப் பார்க்கவேண்டும், இரண்டு மணி நேரத்தை எதற்காகப் படம் பார்க்கச் செலவிட வேண்டும், படம் முடிந்த பிறகு திரையரங்கில் இருந்து வெளியே செல்லும் ரசிகர்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்களா, எதிர்காலத்தில் இந்தப் படத்தைப் பற்றி நினைவுகூரும்போது எனது கதாபாத்திரம் நினைவுக்கு வருமா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே ஒரு கதையில் நடிக்க ஒப்புக்கொள்வேன்," என்கிறார்.
தமிழில் அடுத்து 'ஜன கன மண' என்ற படத்தில் நடித்து வரும் டாப்சி கைவசம் குறைந்தது ஆறு படங்கள் உள்ளன. ஒருசிலரைப் போல் ஓய்வின்றி நடிப்பதில் இவருக்கு உடன்பாடு இல்லையாம். அது உடல்நலனை மட்டுமல்ல, மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்கிறார்.
இதுவரை நடிகையாக சம்பளம் வாங்கியவர், இப்போது தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். தாம் நடிக்கும் 'ப்ளர்' என்ற இந்தப் படத்தை தயாரிக்கிறாராம்.
இந்தியத் திரையுலகில் நடிகைகளுக்கு சம்பளம் தருவதில் பாகுபாடு உள்ளது என்பது டாப்சி முன்வைக்கும் முதன்மைக் குற்றச்சாட்டு.
பல வெற்றிப் படங்களில் நாயகிகளின் பங்கு முக்கியமானதாக இருந்தபோதிலும், சம்பளம் என்று வரும்போது சமநிலை கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.
"ஒரு நடிகையாக படத்தின் விளம்பர, சந்தைப் படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து நான் எந்த முடிவும் எடுக்க இயலாது. ஆனால் தயாரிப்பாளர் என்ற வகையில் அதிக சுதந்திரம் கிடைத்துள்ளது," என்கிறார் டாப்சி.
அடுத்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவரான மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் டாப்சி, இந்தப் படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்.
சமூக நலன் சார்ந்த தனது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்த டாப்சி தயங்குவது இல்லை. தமது இந்தச் சமூகப் பணி தொடர்ந்து நீடிக்கும் என்கிறார்.
, :
டாப்சி