தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன்.
இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
'செல்ஃபி' என்ற வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்தான் நாயகன்.
சென்னைக்கு அருகே உள்ள கடலூர் பகுதியைச் சேர்ந்த மாணவன், பொறியியல் படிப்புக்காக சென்னை வருகிறான். அவன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் அடிப்படையாம்.
கல்லூரி மாணவனுக்கு ஏற்ற தோற்றம் இருப்பதால் ஜி.வி.பிரகாஷை அணுகியதாகச் சொல்கிறார் மதிமாறன்.
"பொதுவாகப் பார்த்தால் எளியவர்கள்தான் இங்கே அதிகம் சிரமப்படுகிறார்கள். ஆனால் அனைத்தையும் மீறி, வாழ்க்கையைப் பற்றிய ஒரு நம்பிக்கை அனைவர் மனதிலும் இருக்கும். என்னை ஆச்சரியப்படுத்திய விஷயங்களில் இதுவும் ஒன்று.
"இந்த யதார்த்தத்தையும் கள நிலவரத்தையும் தன் நடிப்பில் மிக கச்சிதமாகப் பிரதிபலித்தார் ஜிவி.
"உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்பு வரை எட்டிப் பார்க்கும் முனைப்பு என்னிடம் எப்போதுமே இருக்கும்.
"நேர்மை வெற்றிபெறுமா என்பது தெரியாது. ஆனால் இந்த உலகத்துக்கு எது நியாயம் என்பது நன்கு தெரியும். இந்தக் கருத்தை சொல்வதற்கு ஜிவி உதவிகரமாக இருந்தார்," என்கிறார் மதிமாறன்.
ஜ.வி.பிரகாஷிடம் பல்வேறு திறமைகள் ஒளிந்து கிடப்பதாகக் குறிப்பிடுபவர், அவரைத் தனது கதைக்கு ஏற்ற நாயகனாக மாற்றுவதில் சிரமம் ஏதும் ஏற்படவில்லை என்கிறார்.
"ஜிவிக்குள் இருந்த இயக்குநர் கௌதம் மேனன் போன்ற குணாதிசயத்தை அகற்றிவிட்டு, லுங்கி கட்ட வைத்தோம். பிறகு அவரது நுனிநாக்கு ஆங்கிலத்தையும் உருவினோம். அதன் பிறகு சாதாரண, சராசரி இளையராக கதைக்குள் உலவவிட்டபோது, அவருக்கே அனைத்தும் பிடித்துப்போனது. அதன் பிறகு அவரே (ஜிவி) ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார். மொத்தமாக மாறிவிட்டார்.
"நாயகியாக நடிப்பவர் வர்ஷா பொல்லமா. இவருக்கும் ஜிவிக்கும் இடையே ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக படக்குழுவில் உள்ள அனைவருமே கூறிவிட்டனர். எனினும் ரசிகர்கள்தான் உண்மையான நடுவர்கள். அவர்கள்தான் இந்தப் படத்தில் எல்லா அம்சங்களும் நன்றாக உள்ளனவா என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்கிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் பார்க்கும்போது தமிழகத்தில்தான் கல்விக்கான கட்டமைப்பு பலமாக உள்ளதாகக் குறிப்பிடுபவர், இதன் காரணமாகவே வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தமிழகத்தில் கல்வி கற்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"இப்படியான பெருமைமிகு முகம் ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சில கறுப்புப் பக்கங்களும் உள்ளன. கல்வி சார்ந்த சில கறுப்பு அத்தியாயங்களை தமிழகம் கடந்து வந்திருக்கிறது. அதுபோன்ற கறுப்புப் பக்கங்களை வெளிச்சம்போட்டு காட்டும் படமாக 'செல்ஃபி' இருக்கும்," என்கிறார் மதிமாறன்.
தலைப்புக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்பதை இப்போதே விளக்கமுடியாது என்று குறிப்பிடுபவர், படம் துவங்கியதுமே இந்தத் தொடர்பு ரசிகர்களுக்குப் புரியத் தொடங்கும் என்கிறார்.
"சினிமா மூலம் பெரிய அளவில் சமூக மாற்றங்களைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை பெரிதாக இல்லை. அதேசமயம் நமது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
"பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும். அதைத் தவிர்க்க இயலாது. எனக்கும் தவிர்க்கத் தோணவில்லை.
"இங்கே இன்னமும் சொல்லப்படாமல் இருக்கும் விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்க சமூக நீதியும் இருமொழிக் கொள்கையுமே முக்கியக் காரணம் என நம்புகிறேன். அவற்றை எல்லாம் இந்தப் படத்தில் நிச்சயம் சொல்வேன்," என்கிறார் மதிமாறன்.
ஜி.வி.பிரகாஷ்
, :