சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றதால் உற்சாகத்தில் மிதக்கிறார் இளம் நாயகி அனகா.
2021ஆம் ஆண்டுக்கான 'சைமா' விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் தமக்கும் விருது அறிவிக்கப்பட்டது எதிர்பாராத ஒன்று என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருது தொடர்பாக சிலர் விமர்சித்திருப்பது முதலில் வருத்தம் அளித்தது என்றும் பிறகு திரையுலகில் இதெல்லாம் வழக்கமான ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் அனகா.
"ஏனோதானோ என்று யாரும் விருதுகளை அறிவிக்கமாட்டார்கள். ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கவனிக்கும் விருதுகளில் இதுவும் ஒன்று.
"பெரிய கலைஞர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளனர்.
"அந்த வரிசையில் எனக்கும் ஒரு விருது கிடைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். எனது கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது கிடைத்துள்ளது.
"விமர்சனங்கள் நல்ல விதமாகவும் நியாயமாகவும் இருக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை," என்கிறார் அனகா.
திரைப்படப் பாடல்களை தொடர்ந்து கேட்பது இவரது முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்றாம். தாம் இளையராஜாவின் தீவிர ரசிகை என்றும் அவரது பாடல்கள் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை தாம் கேள்விப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்.
சந்தானம் நடித்த 'டிக்கிலோனா'வில் இவர்தான் நாயகி என்பது இளையர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் 'பேரு வெச்சாலும்' என்று தொடங்கும், 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ரீமிக்ஸ்' செய்யப்பட்டுள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பு தம்மை ஆச்சரியப்படுத்தியதாகச் சொல்கிறார் அனகா.
"பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொல்வார்களே, அது எப்படி இருக்கும் என்பதை இந்தப் பாடல் மூலம் தெரிந்து கொண்டேன். என் குடும்பத்தார், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருமே இந்தப் பாடலைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அதேசமயம் முந்தைய படத்தில் இடம்பெற்ற அசல் பாடலுக்கும் நான் தீவிர ரசிகை. அதனால் 'ரீமிக்ஸ்' பாடலை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா எனும் சந்தேகம் இருந்தது. நல்ல வேளையாக அனைவருக்கும் பிடித்திருக்கிறது," என்று சொல்லும் அனகா, முறைப்படி பரதநாட்டியமும் மேற்கத்திய நடனமும் கற்றுத் தேர்ந்தவர்.
அதனால்தான் தம்மால் நடனக் காட்சிகளில் சிறப்பாக ஆட முடிகிறது என்கிறார். 'டிக்கிலோனா', 'நட்பே துணை' ஆகிய இரு படங்களிலும் இவரது நடனம் சிறப்பாக இருந்ததாகப் பலர் பாராட்டி உள்ளனர்.
"நடனம் என் வாழ்க்கையில் முக்கியமான அம்சம். நான் தொடர்ந்து முன்னேற ஊக்கமளிக்கும் சக்தி நடனம்தான் என்பேன். நடனத்தின் மீதான ஆர்வம்தான் என்னை திரைப்பட நடிகையாகவும் மாற்றியது. மனம் தளரும்போது, ஏதாவது சிக்கல் ஏற்படும்போது நடனத்தில்தான் கவனம் செலுத்துவேன். அதன் மூலம் மனம் அமைதியாகும்.
"விளையாட்டிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் விளையாட்டை மையப்படுத்தி உருவான 'நட்பே துணை' படத்தில் ஆர்வத்துடன் நடித்தேன்," என்கிறார் அனகா.
ஹாக்கி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு உருவான அந்தப் படத்துக்காக சில காலம் பயிற்சி பெற்றாராம். தந்திரமாக ஆட வேண்டிய அந்த விளையாட்டில் தாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது என்கிறார். 'டிக்கிலோனா'வில் பெண்கள் குறித்து பேசப்பட்ட கருத்துகள் விமர்சனங்களை எழுப்பி உள்ளன. இதுகுறித்து கேட்டால், சினிமாவை வைத்து அரசியல் செய்வதில் தமக்கு உடன்பாடில்லை என்கிறார்.
"திரைத்துறையில் சரியான அரசியலை நாம் எதிர்பார்க்க முடியாது. திரைப்படங்களை பொழுதுபோக்கு அம்சங்களாகப் பார்க்க வேண்டும். அதில் ஒரு கதை சொல்லப்படுகிறது, அவ்வளவுதான்.
"ஒரு கதாபாத்திரம் பெண்களைப் பற்றிய சில கருத்துகளைச் சொல்வதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதுதான் உண்மை என்று நினைத்துவிடக் கூடாது," என்று சொல்லும் அனகா, தமிழில் ஒரு படத்தில் இலங்கைப் பெண்ணாகவும் மலையாளத்தில் 'பீஷ்மா பர்வம்' என்ற படத்தில் மம்மூட்டியுடனும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

