'பீஸ்ட்' படத்துக்காக டெல்லி சென்ற விஜய் அங்கிருந்து வெளிநாடு செல்ல இருப்பதாக வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.
அண்மைக்காலமாக ஊடகங்களில் தன்னைப் பற்றியும் குடும்பத்தார் பற்றியும் வெளிவரும் பொய்யான தகவல்களால் அவர் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும் இத்தகைய விவகாரங்களுக்கு மத்தியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்தது, அவர் எந்த அளவுக்கு தொழில் ரீதியில் திட்டமிட்டுச் செயல்படுகிறார் என்பதற்கு நல்ல உதாரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
தனது அனுமதியின்றி அரசியல் களம் காண விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டதை அவர் விரும்பவில்லை. இதனால் பெற்றோருக்கும் அவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இயக்கம் மூடு விழா கண்டது.
இதையடுத்து, வீடு தேடி வந்த பெற்றோரை வீட்டுக்குள் விடாமல் வெளியே நிற்க வைத்தார் விஜய் என ஊடகத்தில் தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பொய்த் தகவல் என்பதை விஜய்யின் தந்தை தெளிவுபடுத்தி உள்ளார்.
இத்தகைய சிக்கல்களை மறக்கடிக்கும் வகையில் 'பீஸ்ட்' பட வெளியீடு இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் விஜய்.
திரையரங்குகள் முழு வீச்சில் செயல்படும் வேளையில் இப்படம் வெளியாகும் என்பதால் திருவிழாவைப் போல் களைகட்ட வேண்டும் என்று தனது நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே 'பீஸ்ட்' படத்தின் வெளியீட்டு உரிமை முந்தைய விஜய் படங்களைக் காட்டிலும் புதிய உச்சத்தை தொடும் என விநியோகிப்பாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.