சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் 'லவ் ஸ்டோரி'. படம் வெளியான அன்றே உலக அளவில் ரூ.10 கோடி வசூல் செய்திருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு வெளியான படங்களில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது 'லவ் ஸ்டோரி'.
'லவ் ஸ்டோரி' படம் வசூல் வேட்டை நடத்தி வருவதால்தான் நாக சைதன்யா மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஹைதராபாத்தில் நடந்த 'லவ் ஸ்டோரி' பாராட்டு விழாவில் கலந்துகொண்ட நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தன் மகனை முன்னணி நடிகராக்கியதற்கு இயக்குநர் சேகர் கம்முலாவுக்கு நன்றி தெரிவித்தார்.
காதல் கதை என்றவுடன், சாதிப் பாகுபாடுகள், மத வேற்றுமைகள் என அதைச் சுற்றி மட்டும் பேசாமல் பெண் சுதந்திரம், பெண்களுக்குச் சிறுவயதில் நடக்கும் பாலியல் சீண்டல்கள்
போன்றவை குறித்து துணிந்து பேசி யிருக்கிறார் இயக்குநர்.
கிராமத்திலிருந்து ஹைதராபாத் வந்து 'ஜும்பா' உடற்பயிற்சி கூடம் வைத்து வாழ்வில் முன்னேறும் கனவுடன் இருக்கும் இளைஞன் ரேவந்த். 'ஐடி' நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தினரைச் சாராமல் வாழ அதே
ஹைதராபாத்துக்கு வந்து ரேவந்தின் பக்கத்து வீட்டிலேயே குடி இருக்கிறார் மௌனிகா.
வேலை எதுவும் கிடைக்காமல் போகவே தன்னுடைய அசாத்திய
நடனத் திறமையால் ரேவந்த்தின் உடற்
பயிற்சிக் கூடத்தில் பங்குதாரராக இணைகிறார் மௌனிகா.
இருவருக்கும் இடையில் காதலும் மலர, நடுவில் அவர்களின் சாதி, மதம் பிரச்சினை போதாதென்று மௌனிகாவின் சிறுவயது பிரச்சினைகளும் வந்து நிற்கின்றன.
ரேவந்த்தாக வரும் நாக சைதன்யா எப்போதும்போல சாகசங்கள் எதுவும் செய்யாமல் யதார்த்தமான நாயகனாக வலம் வருகிறார். தன்னுடைய நடனத்தை மெருகேற்றி காதல் நாயகனாக மட்டுமே உலா வந்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் பணத்தேவைக்காக ஊரிலிருக்கும் தாயிடம் சென்று திட்டு வாங்குவதும் அடிவாங்குவதுமென நகைச்சுவையிலும் கலக்கி இருக்கிறார். ஆனால், படத்தில் நாக சைதன்யாவைத் தூக்கி விழுங்கி ஏப்பம் விடுவது சாய் பல்லவிதான். இவர்தான் படத்தின் மிகப்பெரிய தூண். இயலாமை, ஏமாற்றம், பயம், தவிப்பு, கோபம், அழுகை என கலந்துகட்டி நடித்து பாராட்டுப் பெறு
கிறார்.
ஆட்டோக்காரரிடம் ஐந்து ரூபாயை விட மனமில்லாமல் பேசும் முதல் காட்சியிலிருந்து சாய் பல்லவி மறைந்து மௌனிகா எனும் கதாபாத்திரம்
மட்டுமே தெரிகிறது.
இரண்டாம் பாதியில் வரும் 'சாரங்க டரியா' பாடலில், நடனத்தில் வேறொரு தளத்துக்குச் சென்றிருக்கிறார். அதைப்போல அவருக்குள் இருக்கும் அந்த மறக்க முடியாத இறந்தகால பிரச்சினையையும் கூடவே சுமந்துகொண்டு திரியும் பெண்ணாக இயல்பாகவே வெற்றி நடைபோடுகிறார்.
முக்கியமான இறுதிக் காட்சியில் உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கையில் நாக சைதன்யா தன் அம்மாவிடம் பேசும் வசனங்கள் அருமையாக இருப்பதாகக் கூறுகின்றனர் படம் பார்த்தவர்கள். சாதாரணமாக தெலுங்கு படங்களில் இதுபோன்ற காட்சிகள் இருப்பது மிகவும் குறைவு.
சேகர் கம்முலா இயக்கிய 'கோதாவரி', 'ஹேப்பி டேஸ்', 'லீடர்', 'ஃபிதா' போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் 'லவ் ஸ்டோரி'யும் இணைந்து இருக்கிறது.
சேகர் கம்முலாவின் முதல் படமான 'டாலர் ட்ரீம்ஸ்' படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார். சேகர் கம்முலா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அதில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் தான் போற்றும் இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்க தனுஷ் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் சாய் பல்லவிதான் நாயகி என்றும் கூறப்படுகிறது.