தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி
டோலிவுட் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும் பிரகாஷ் ராஜுவும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். பிரகாஷ் ராஜுக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட முன்னணி நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்டது. பதிவான 655 வாக்குகளில் விஷ்ணு மஞ்சுக்கு 381 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜுக்கு 274 ஓட்டுகளும் பதிவாகியிருந்தன. இதன்மூலம் 113 வாக்கு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ்.
மைக் டைசனுடன் இணையும் விஜய்
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வரும் பூரி ஜெகன்நாத் தற்போது 'லைகர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக மதிக்கப்படும் மைக் டைசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் எடுக்கப்படும் 'லைகர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோவாவில் நடைபெற்றது. தற்போது இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் மைக் டைசன் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். இவர் அண்மையில் தன் அப்பா, அம்மா, தம்பி ஆகியோரை தனி விமானம் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதை அவருடைய தம்பி காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். படங்களில் நடிக்கத் துவங்கியபோது வங்கிக் கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விஜய் தேவரகொண்டா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் இவர் தன் பெயரில் ஹைதராபாத்தில் திரையரங்கம் ஒன்றைத் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர மன உளைச்சலில் ஷாருக்கான்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து விவகாரத்தினால் தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊடகங்களின் அறிக்கையின்படி, ஆர்யன் கானுக்கு வீட்டு உணவுகள் வழங்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை உணவு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், மகனுக்கு பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகும் பிணை கிடைக்காததால் ஷாருக்கான், தான் நடித்து வரும் படப்பிடிப்புகளை நிறுத்தியது மட்டும் இன்றி, மகனின் நிலையை எண்ணி கவலையில் சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் மன உளைச்சலில் இருப்பதாக பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.
ஓடிடியில் 'ஓ மணப்பெண்ணே'
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஓ மணப்பெண்ணே'. அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்பலு' படத்தின் தமிழ் மறுபதிப்பாக இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் அக்டோபர் 22ஆம் தேதி நேரடியாக 'ஹாட்ஸ்டார் ஓடிடி' தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே ஹரீஷ் கல்யாண் நடித்த 'கசட தபற' படமும் நேரடியாக 'ஓடிடி'யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.