தீபாவளி விருந்தாக ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’, விஷால், ஆர்யாவின் ‘எனிமி’, சிம்புவின் ‘மாநாடு’, அருண் விஜய்யின் ‘வா டீல்’, சூர்யாவின் ‘ஜெய்பீம்’ ஆகிய ஐந்து படங்கள் வெளியாவதாகத் தகவல் வந்துள்ளது. இவற்றில் ‘ஜெய்பீம்’ தவிர மற்ற நான்கு படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ‘ஜெய்பீம்’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி தெரிவித்த பிறகு வெளியாகும் அவரது முதல் படம் அண்ணாத்த.
பலரும் சொல்வது போல் ரஜினியின் இமேஜ் முடிந்துபோன சரித்திரமா, இல்லை மிச்சம் இருக்கிறதா என்பதை அண்ணாத்தயின் வசூல் சொல்லிவிடும். அந்த வகையில் ‘அண்ணாத்த’ படத்தை பலரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
ரஜினியின் புதிய படங்கள் வெளியாக இருக்கும் வேளையில் அவரது அரசியல் தொடர்பான செய்திகள் வெளிவருவது வழக்கம். இம்முறை அதுபோன்ற செய்திகள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்துக்குத் திரைப்படத் தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துணையுடன் படத்தைப் பார்க்கலாம்.
கிருமிப் பரவலால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 விழுக்காடாக உயர்த்த திரைப்பட வெளியீட்டுச் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
அண்மை வாரங்களாக கிருமிப் பரவல் குறைந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ஆம் தேதி முதல் எல்லாத் திரையரங்குகளிலும் 100 விழுக்காடு இருக்கைகளை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என திரையரங்கு அதிபர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.