'பார்டர்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தாம் உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் அருண் விஜய்.
இப்படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார். இருவரும் ஏற்கெனவே 'குற்றம் 23' படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில் 'பார்டர்' படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்டோருக்கு 'ஐ பேட்' பரிசளித்துள்ளார் அருண்.
படம் தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்திருப்பதாகவும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே தம்மால் இயன்ற பரிசை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
"இந்தப் படத்தில் உங்கள் (படக்குழுவினர்) அனைவரது அற்புதமான பணிக்கான ஓர் அன்பின் அடையாளம் இந்தப் பரிசு. இந்த அற்புதமான கதையில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றி.
"இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும் என் சினிமா வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும் இருக்கும்," என்று அருண் விஜய் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி படேல் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
பகவதி பெருமாள் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்க, சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி 'பார்டர்' படம் வெளியீடு காண்கிறது.

