விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எனிமி' படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தவித்து வருகிறார். தன் படத்தை வேண்டும் என்றே சிலர் முடக்குவதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.
வேறொரு பெரிய படம் தீபாவளிக்கு வெளியாவதால் அதைத்தான் திரையிட வேண்டும் என்று ஒருதரப்பினர் திரையரங்க உரிமையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
"நான் கேள்விப்பட்டது உண்மையாக இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஆதரவு கேட்பேன். சினிமா துறைக்கு இத்தகைய போக்கு உதவாது.
"தமிழகத்தில் மொத்தம் உள்ள 900 திரையரங்குகளில் ஒரே படத்தை வெளியிட வேண்டும் என்பது சரியல்ல. அப்படி வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை.
"என் படத்துக்காக நான் கேட்பது 250 திரையரங்குகள் மட்டும்தான். அது கிடைத்தாலே போதும்," என்று வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாலும் 'தீபாவளி வெளியீடு' என்பதில் இருந்து 'எனிமி' பின்வாங்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஓடிடி நிறுவனங்கள் நல்ல தொகையைக் கொடுக்க முன்வந்த போதும், அதை தவிர்த்து திரையரங்குகளை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார்.
'எனிமி' படம் தீபாவளி அன்று வெளியாகாவிட்டால் தனக்கு நீதி கிடைக்க எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடத் தயார் என்றும் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் 'அண்ணாத்த' படத்தைத்தான் மறைமுகமாகச் சாடுவதாகக் கூறப்படுகிறது.

