'டிக்கிலோனா' படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதை அடுத்து சந்தானம் நடிப்பில் 'சபாபதி' வெளியாகிறது.
அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மயக்காதே மாயக் கண்ணா' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதைப்படி, ஸ்ரீரங்கத்தில் வாழும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளையராக நடித்துள்ளார் சந்தானம். வேலை தேடும் படலத்தில் ஈடுபடும் அவர், தன் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறார். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதை அவர் கண்டறிய முற்படுவதை நகைச்சுவையாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ்.
"இந்தப் படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன். என் நினைவுக்கு முதலில் வந்தது சந்தானம்தான்.
"அவர் படப்பிடிப்பில் இருந்தபோது கதை சொல்வதற்காகச் சென்றேன். நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் கடைசிக் காட்சி எடுக்கப்பட்டது. அதன் பிறகு கதை கேட்க உட்கார்ந்தவர், அடுத்த மூன்று மணிநேரம் அசையாமல் காட்சிகளை விவரிக்கச் சொல்லி கேட்டார்.
"மிமிக்ரி பாணியில் பல குரல்களில் ஏற்ற இறக்கத்துடன் நான் கதை சொன்ன விதமும் அவருக்குப் பிடித்திருந்தது. பல இடங்களில் அவரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"மக்களைச் சிரிக்கவைக்கும் ஒரு கலைஞனை நம்முடைய கதை சிரிக்க வைத்துள்ளதே என்று பெருமிதமாக இருந்தது. அப்போதே இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
"நகைச்சுவை நடிகராக இருந்தவர் கதாநாயகனாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் செதுக்கிக்கொண்டு ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
"நாயகனாக மாறியபின், சண்டைக்காட்சிகளில் அவர் நடித்தது கச்சிதமாக இருந்தது. பிறகு உடல் எடையைக் குறைத்து நடித்ததும் கைகொடுத்தது.
"இந்தப் படத்தில் அவர் சந்தானமாக எந்த இடத்திலும் தெரிய மாட்டார். அந்த அளவு வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார்," என்கிறார் ஸ்ரீனிவாச ராவ். இவரும் சந்தானமும் மிக விரைவில் மீண்டும் இணைய இருப்பதாகத் தகவல்.