நடிகை தமன்னா (படம்) மீது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
சமையல் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசி பெங்களூரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் தமன்னா.
இந்நிலையில், அந்த நிறுவனம் தம்மை அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கிவிட்டதாகவும் பேசியபடி சம்பளம் தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், அக்குறிப்பிட்ட நிறுவனம் தமன்னாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. பேசியபடி படப்படிப்பில் பங்கேற்கவில்லை என்றும் தமன்னாவின் தாமதத்தால் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது.
தினமும் முப்பது நிமிடங்கள் நடனம் ஆடினால் போதும், உடல் எடை தன்னால் குறையும் என்றும் உடல்நலம் நன்றாக இருக்கும் என்றும் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி (படம்).
சைவ உணவுகளை மட்டுமே தாம் சாப்பிடுவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு மருத்துவர் என்பதால் இந்த அறிவுரையை ஏற்கலாம். நடனம் தெரிந்தவர்கள் உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போகத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே உடல்நலத்தைப் பேண முடியும்," என்கிறார் சாய் பல்லவி.
இனியா (படம்) நடித்து வரும் 'காபி' படத்தின் முழு தோற்றச் சுவரொட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் காட்சி அளிக்கிறார் இனியா. நமக்குத் தெரியாமலேயே நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிகப் பெரிய சமூக அவலம் குறித்து இந்தப் படத்தில் விவாதித்திருப்பதாகச் சொல்கிறார் இனியா. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளனவாம்.
'ஹிப் ஹாப்' ஆதி தமிழா நடிப்பில் உருவாகி உள்ள 'அன்பறிவு' திரைப்படம் நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகிறது. அஸ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் காஷ்மீரா பர்தேசி நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஓடிடியில் இப்படத்தை வெளியிடுவது என தயாரிப்புத்தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
மும்பையில் தனது கனவு இல்லத்தைக் கட்டி வருகிறார் பூஜா ஹெக்டே (படம்).
கட்டுமானப் பணி நடப்பதை இவர் மேற்பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது குடும்பம் மும்பையில்தான் வசித்து வருகிறது.
"எனவேதான் மும்பையில் வீடு கட்டுகிறேன். கட்டடப் பணிகளை என் அம்மாதான் கவனித்துக்கொள்கிறார். இது எனது கனவு இல்லம். இதனால் நேரம் கிடைக்கும்போது நானும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுகிறேன்," என்கிறார் பூஜா.
'மாநாடு' படத்தில் நடித்ததால் தன்னுடைய நாடி நரம்பு, கழுத்து, முதுகு எல்லாம் பாதிக்கப்பட்டதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் பத்து நாள் ஓய்வெடுக்க வேண்டும் என உடல் உறுப்புகள் கெஞ்சுவதாக அவர் பதிவிட்டுள்ளார். "அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை நவம்பர் 25ஆம் தேதிதான் தீபாவளி," என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். அன்றுதான் 'மாநாடு' படம் வெளியாகிறது.