நடிகர் ரஜினிகாந்த் நேற்று (அக்டோபர் 28) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்செய்தி ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. எனினும், வழக்கமான பரிசோதனைக்காகத்தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா கூறினார்.
ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், காவேரி மருத்துவமனைக்குச் சென்று ரஜினிகாந்தைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவர் விரைவில் வீடு திரும்புவார். ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாவதற்குமுன் அவர் வீட்டில் இருப்பார்,” என்றார்.
ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உடல்நலம் தேறிவரும் அவர், இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.