ஒரே நாளில் சசிகுமாரின் இரண்டு படங்கள் வெளியீடு காண உள்ளன.
சில நாட்களுக்கு முன்புதான் 'உடன்பிறப்பே' படம் வெளியானது. ஜோதிகாவின் 50வது படம் இது.
"நாயகியை முன்னிலைப்படுத்தும் கதை என்றாலும், சசிகுமார் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பெருந்தன்மை இன்றுவரை மாறவில்லை," என்கிறார் 'உடன்பிறப்பே' இயக்குநர் இ.ரா.சரவணன்.
இந்நிலையில், 'ராஜவம்சம்', 'கொம்புவச்ச சிங்கம்டா' ஆகிய இரு படங்களும் இம்மாதம் ஒரே நாளில் வெளியாகின்றன.
"எதற்காக இவ்வளவு அவசரம் என்று கேட்கிறார்கள். என்னை நம்பி பெருந்தொகையை முதலீடு செய்துள்ளனர். ஏற்கெனவே கொரோனா விவகாரத்தால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
"எத்தனை விரைவாக படங்கள் வெளியாகின்றனவோ, அதற்கேற்ப தயாரிப்பாளர்களின் சிரமம் குறையும். அது மட்டுமல்ல, நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.
"படம் இயக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் இயக்குநர் சசிகுமாராக மாற இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன," என்கிறார் சசிகுமார்.
தற்போது இரண்டு கதைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளாராம். அவற்றுள் ஒன்று, பிரம்மாண்டமான, பெரும் பொருட்செலவில் தயாரிக்கக்கூடிய வரலாற்றுக் கதையாம். மற்றொன்று மிக விரைவாக எடுத்து முடிக்கக்கூடிய, குறைந்த செலவிலான படத்துக்கான கதை என்கிறார்.
இரண்டு கதைகளையும் படமாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனத் தகவல்.
ஜோதிகாவுடன் நடித்தது நல்ல அனுபவம் என்று குறிப்பிடுபவர், ஜோதிகாவின் திறமை தம்மை அசர வைத்ததாகச் சொல்கிறார்.
"எவ்வளவு கடினமான காட்சி என்றாலும் மிக எளிதாக ஒரே 'டேக்'கில் நடித்துவிடுவார். அது மட்டுமல்ல, உணர்வுபூர்வமான காட்சிகளில் அவர் 'கிளிசரின்' பயன்படுத்தி நான் பார்த்ததில்லை.
"காட்சியை உள்வாங்கி கதாபாத்திரமாகவே மாறக்கூடிய ஒருவரால்தான் இவ்வாறு நடிக்க முடியும்," என்று பாராட்டுகிறார் சசி.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சசி நடித்து வெளியான முதல் படம் 'உடன்பிறப்பே'தான். மிக யதார்த்தமான கதை அம்சம் கொண்ட இதுபோன்ற படங்களில் நடித்த வகையில் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
திரையுலகின் பல்வேறு துறைகளில் நாட்டம் கொண்டவர் சசி. இன்று வரை இத்தகைய ஆர்வமும் உழைப்பும்தான் தம்மை தொடர்ந்து இயங்க வைப்பதாகச் சொல்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் சில தோல்விகளைச் சந்தித்து உள்ளதாக ஒப்புக்கொள்பவர், அவற்றால் தாம் முடங்கிவிடவில்லை என்றும் தமது சோதனை முயற்சிகளை நிறுத்திவிடவில்லை என்றும் கூறுகிறார்.
"நான் படம் இயக்கி பத்து ஆண்டுகளாகிவிட்டன. தேசிய அளவில் என்னைப் பற்றி பேச வைத்தது நான் இயக்கிய படங்கள்தான். கடந்த பத்தாண்டுகளில் வெறும் நடிப்புடன் எனது பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை.
"எனது படங்களுக்கான கதை, திரைக்கதைகளை மெருகேற்றுவதில் இயக்குநர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளேன். ஒரு காட்சியைக் குறிப்பிட்ட இயக்குநர் எத்தகைய கோணத்தில் எடுக்கிறார் என்று கவனிக்கும்போது எனக்குள் உள்ள இயக்குநர் சசி விழித்துக்கொள்கிறான்.
"அந்த வகையில் எனது அடுத்த படத்துக்கான எனது சிந்தனை ஓய்வெடுக்காமல் செயலில் உள்ளது," என்கிறார் சசிகுமார்.
தம்மை பிரம்மாண்ட நாயகன் என்று ரசிகர்கள் குறிப்பிட வேண்டும், பெரும் செலவில் உருவாகும் படங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆசையெல்லாம் தமக்கு இல்லை என்று குறிப்பிடுபவர், சராசரி மனிதராக, சமூகத்தில் ஒருவராக தம்மை சித்திரிக்கும் கதைகளுக்குத்தான் முன்னுரிமை அளிப்பதாகச் சொல்கிறார்.
சசிகுமார் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்று அன்புத்தொல்லை கொடுப்பவர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
"என் சகோதரர் சசியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால், 'உடன்பிறப்பே' படத்தில்தான் முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை ஒருசேர பயணம் செய்தோம்.
"சசியின் அனைத்து முயற்சிகளுக்கும் நான் துணை நிற்பேன். அவரது இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக காத்திருக்கிறேன்," என்கிறார் சமுத்திரக்கனி.

