அறிவியலையும் கற்பனையையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாகி உள்ளது 'ஜாங்கோ'. மனோ கார்த்திகேயன் இயக்கி உள்ளார்.
'முண்டாசுப்பட்டி' ராம்குமார், 'இன்று நேற்று நாளை' ரவிக்குமார், 'மரகத நாணயம்' ஏ.ஆர்.கே.சரவணன் எனத் தமிழகத்தின் திருப்பூர் நகரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து சாதித்தவர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெறக்கூடும்.
நிறைய திகில் கதைகள் வந்தவண்ணம் இருப்பதால் அவற்றில் இருந்து மாறுபட்ட படைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம் மனோ.
"அப்போதுதான் காலச்சக்கரத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கலாம் எனத் தோன்றியது. அப்போதுதான் இந்தக் கதையை உருவாக்கினேன். ஆனால் நான் நினைத்ததுபோல் அவ்வளவு எளிதாக திரைக்கதையை அமைக்க முடியவில்லை.
"இப்படிப்பட்ட கதை எல்லோருக்கும் புரியுமா என்று யோசனையாக இருந்தது. ஆனால் நண்பர்கள் சிலரிடம் கதையை விவரித்தபோது மிகவும் நன்றாக இருக்கிறது என உற்சாகம் அளித்தனர்.
"எனினும் இப்படிப்பட்ட ஒரு கதையை தயாரிக்க யார் முன்வருவார்கள் என்று அடுத்த கேள்வி எழுந்தது. அப்போது தயாரிப்பாளர் சி.வி.குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்தித்துக் கதையைச் சொன்னபோது, என் நம்பிக்கை வீண் போகவில்லை. அடுத்த நிமிடமே இந்தக் கதையைப் படமாக்கத் தயார் என்று கூறிவிட்டார்," என்கிறார் மனோ கார்த்திகேயன்.
சரி... இந்தக் கதையில் அப்படியென்ன சுவாரசியம் உள்ளதாம்?
"காலசக்கரத்தை மையமாக வைத்து இதுவரை வெளிவந்த படங்களில் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். ஒரே காலகட்டத்துக்குள் அல்லது ஒரே சம்பவத்துக்குள் ஒருவர் அல்லது பலர் சிக்கிக் கொள்வது போன்றுதான் கதை இருக்கும்.
ஆனால் இப்படத்தின் நாயகன் திரும்பத் திரும்ப ஒரே நாளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பார். அந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாகவும் கொஞ்சம் கற்பனையும் கலந்து சொல்கிறோம்," என்கிறார் மனோ.
'ஜாங்கோ' என்றால் ஜெர்மானிய மொழியில் 'மீண்டும் எழுவேன்' என்று அர்த்தமாம்.

