தீபாவளிக்கு வெளியீடு கண்ட படங்களின் வசூல் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் உண்மை நிலை வேறு என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இம்முறை தீபாவளிக்கு ரஜினியின் 'அண்ணாத்த', 'விஷால்', ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' ஆகிய இரு படங்கள்தான் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகின.
வேறு பெரிய படங்கள் இல்லாத காரணத்தால் உலக அளவில் இரு படங்களும் வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கேற்ப 'அண்ணாத்த' முதல் நாளன்றே ரூ.35 கோடி வசூல் கண்டதாக தகவல் வெளியானது. இரண்டாவது வசூலும் மனநிறைவு தந்ததாக தயாரிப்புத் தரப்பில் கூறப்பட்டது. இதேபோல் 'எனிமி' படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருப்பதாக விஷால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், 'அண்ணாத்த' நேற்று முன்தினம் வரை ரூ.200 கோடி வசூல் கண்டுள்ளதாகவும் 'எனிமி' ரூ.20 கோடி வசூலைத் தந்துள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. ஆனால் இரு படங்களும் வெளியான மூன்றாவது நாளன்றே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்னையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது கனமழை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராத நிலையில் எப்படி கோடிக்கணக்கில் வசூல் ஆகி இருக்கும் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இரு படங்களின் தயாரிப்புத் தரப்பில் இருந்தும் வசூல் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

