அஜித் வழியில் நிவேதா

3 mins read
d16a4494-f215-4785-976b-4912773c6c56
-

தமிழ் சினி­மா­வில் தமது நடிப்­புப்பசிக்குத் தீனி­போ­டும் வகை­யில் நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமை­ய­வில்லை என்­கி­றார் நடிகை நிவேதா பெத்­து­ராஜ்.

அதே­ச­ம­யம் தெலுங்­கில் தமக்கு சவா­லான பாத்­தி­ரங்­கள் அமை­வ­தா­க­வும் அத­னால்­தான் தெலுங்­குப் படங்­களுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நிவேதா நடித்துள்ள தமிழ்ப் படம் 'பொன்.மாணிக்­க­வேல்'. இதன் வெளி­யீட்­டிற்­குப் பிற­கே­னும் கோலி­வுட்­டில் தாம் எதிர்­பார்க்­கும் வாய்ப்­பு­கள் அமை­யும் என நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"இது­வரை நான் தமி­ழில் நடித்­துள்ள படங்­களில் 'திமிரு புடிச்­ச­வன்' படத்­தில் ஏற்ற மடோனா கதா­பாத்­தி­ரம்­தான் எனக்கு மன­நி­றைவைத் தந்­தது. அதில் சுதந்­தி­ர­மாக நடிக்க முடிந்­தது. மேலும் எனது வச­னங்­க­ளை­யும் நடிப்­பை­யும் மெரு­கேற்ற வாய்ப்பு அளித்­த­னர். இதற்­காக அப்­படத்­தின் இயக்­கு­ந­ருக்கு நன்றி சொல்ல வேண்­டும்," என்று சொல்­லும் நிவேதா, கதா­நா­ய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­களை ஏற்க தாம் இன்­னும் தயா­ரா­க­வில்லை என்­கி­றார்.

கொரோனா முடக்க நிலை­யின்­போது நாய­கியை மையப்­ப­டுத்­தும் சில கதை­கள் தேடி வந்­த­ன­வாம். ஆனால் எடுத்த எடுப்பி­லேயே அவற்றை நிரா­க­ரித்­து­விட்­டா­ராம்.

"சவா­லான, என் திற­மையை வெளிப்­படுத்­தக்கூடிய கதா­பாத்­தி­ரங்­களை எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­விட்டு, தனி நாய­கி­யாக நடிக்க மறுத்­தால் எப்­படி என்று சிலர் கேட்­ப­தில் நியா­யம் உள்­ளது. எனி­னும் முழுப் படத்தை­யும் எனது தோளில் சுமக்­கும் அள­வுக்கு நான் சினி­மா­வில் இன்­னும் வள­ர­வில்லை என்று நினைக்கி­றேன்.

"நயன்­தாரா, சமந்தா, திரிஷா போன்­ற­வர்­கள் என்­னைப் பொறுத்­த­வரை உச்ச நட்­சத்­தி­ரங்­கள். அவர்­களை சூப்­பர் ஸ்டார்­கள் என்று குறிப்­பிட தயங்­கத் தேவை இல்லை. நீண்ட கால­மாக திரைத்­து­றை­யில் இருப்­ப­தால் அவர்­க­ளுக்கு என தனிச் சந்தை மதிப்பு உள்­ளது. அதே­ச­ம­யம் எனக்­கான சந்தை மதிப்பு வேறு ரகம்.

"தற்­போது நான் வலு­வான கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே எதிர்­பார்க்­கி­றேன். எனி­னும் முதல் சோதனை முயற்­சி­யாக தெலுங்­கில் நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளேன். அதில் கதைப்­படி மூன்று முக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள் உள்­ளன. ஆனால் எனது கதா­பாத்­தி­ரம்­தான் படத்தை அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளுக்கு நகர்த்­திச் செல்­லும்," என்­கி­றார் நிவேதா.

தமி­ழில் இவ­ரது நடிப்­பில் 'ஜெகஜ்­ஜால கில்­லாடி', 'பார்ட்டி' ஆகிய இரு படங்­கள் வெளி­யீடு காண காத்­தி­ருக்­கின்­றன. இரண்­டுமே வணிக அம்­சங்­கள் நிறைந்த படங்­கள்.

"சில சம­யங்­களில் வணி­கப் படங்­க­ளி­லும் நடிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகிறது. ஏனெ­னில் அவை­தான் சரா­சரி ரசி­கர்­க­ளி­டம் நம்­மைக் கொண்டு சேர்க்­கும். அந்த வகை­யில் இவ்­விரு படங்­களும் ஜன­ரஞ்­ச­க­மான படைப்­பு­க­ளாக உரு­வாகி உள்­ளன. படப்­பி­டிப்­பின்­போது மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் உற்­சா­க­மாக செயல்­பட்­ட­னர். நிறைய சுவா­ர­சி­யங்­கள் அரங்­கே­றின," என்­கி­றார் நிவேதா.

சினி­மா­வில் நடிக்­கத் தொடங்­கி­யது முதல் தாம் எதை­யும் திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டுத்­தி­ய­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், யாரை­யும் பின்­பற்றி நடிக்­க­வில்லை என்­கி­றார். கிடைத்த வாய்ப்­பு­களை ஏற்று நடித்து வந்­த­தா­க­வும் இப்­போது சற்றே முதிர்ச்சி அடைந்­தி­ருப்­ப­தாக உணர்­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

'பொன்.மாணிக்­க­வேல்' படத்­தின் ஒவ்­வொரு காட்­சி­யும் ரசிக்­கும்­படி இருக்­கும் என்­றும் அந்­தப் படத்­தின் நாய­கன் பிர­பு­தே­வா­வுடன் இணைந்து நட­ன­மா­டி­யது மறக்க முடியாத அனு­ப­வம் என்­றும் கூறு­கி­றார் நிவேதா.

"ஒரு பாடல் காட்­சிக்­காக இரு­வ­ரும் இணைந்து நட­ன­மா­டி­னோம். படப்­பிடிப்­புக்­குப் பிறகு எனக்­கான நடன அசைவு­களை பல­முறை பயிற்சி செய்­தேன். இதற்கு அரை­நாள் தேவைப்­பட்­டது. அதன் பிற­கு­தான் நமது நடன அசைவு திரை­யில் எப்­ப­டிப் பதி­வா­கும் என்­பதை உணர முடிந்­தது. பிர­பு­தேவா எனக்கு பல நுணுக்­கங்­க­ளைக் கற்றுக்­கொ­டுத்து உத­வி­னார்.

"அந்­தப் பாடலை என் பெற்­றோ­ரு­டன் அமர்ந்து திரை­யில் பார்த்­த­போது மன­துக்கு சற்றே நெரு­ட­லாக இருந்­தது. கார­ணம், சில நடன அசை­வு­களில் இரு­வ­ரும் நெருக்­க­மாக இருப்­போம். அது­கு­றித்து பெற்­றோர் ஏதா­வது விமர்­சிப்­பார்­கள் என்று நினைத்­தேன். ஆனால், ஒரு நடி­கை­யாக எனது பங்­க­ளிப்பை சரி­யாக வழங்கி இருப்­ப­தாக இரு­வ­ரும் பாராட்­டி­யது வியப்­ப­ளித்­தது," என்று கூறும் நிவே­தாவை 'பெண் அஜித்­கு­மார்' என­லாம்.

கார­ணம், அவ­ரைப் போன்றே நிவே­தா­வுக்­கும் கார் பந்­த­யங்­களில் ஆர்­வம் அதி­கம். வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் அதற்­கான பயிற்­சி­யில் ஈடு­ப­டு­கி­றார். ஃபார்முலா கார் பந்­த­யங்­க­ளுக்­கான முதற்­கட்ட பயிற்­சியை முடித்­துள்­ளா­ராம். துபா­யில் வசித்­த­போது இதற்கு நேரம் இருந்­தது என்­கி­றார்.

"கார் பந்­த­யம் என்­பது விலை­ ம­திப்­பான விளை­யாட்டு. அதற்­கான பயிற்சிக்கு பெருந்­தொகை தேவைப்­படும். எனக்கு வசதி இல்­லா­த­தால் பயிற்­சி­யில் நீடிக்க முடி­ய­வில்லை. சினி­மா­வில் நடித்­த­தன் மூலம் இப்­போது ஓர­ளவு பணத்தைச் சேமித்துள்­ளேன். அதை வைத்து பயிற்­சியைத் தொடங்கியுள்­ளேன்," என்று சொல்­லும் நிவேதா, மிக விரை­வில் இந்­தி­யா­வில் நடை­பெற உள்ள தேசிய அள­வி­லான கார் பந்­த­யத்­தில் பங்­கேற்க உள்­ளார்.