'ஜெய் பீம்' படம் குறித்து நடிகர் சூரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பலரும் பகிர்ந்து வந்த நிலையில், சூரியின் அந்தப் பதிவுக்கு சூர்யா அளித்துள்ள பதில் சுவாரசியமாக உள்ளது.
இதையடுத்து, சூர்யாவின் பதிலையும் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு நாள் இரவு வேளையில் 'ஜெய் பீம்' படத்தைப் பார்ப்பது என முடிவு செய்தாராம் சூரி. தூங்குவதற்கு முன்பு சிறிது நேரம் பார்த்துவிட்டு, மீதமுள்ள படத்தை மறுநாள் பார்க்கலாம் என்பதுதான் அவரது திட்டமாக இருந்துள்ளது.
"இப்படி நினைத்துதான் படம் பார்க்கத் தொடங்கினேன். ஆனால், படம் முடிந்த பிறகும்கூட அமர்ந்திருந்த இடத்தில் இருந்து என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அப்படியே உறைந்து போனேன். 'ஜெய் பீம்' படம் அல்ல, பாடம். இந்தப் படத்துக்கு விருது கிடைத்தால், அது விருதுக்குப் பெருமை," என்று பதிவிட்டிருந்தார் சூரி.
அவரது இந்தப் பதிவை ஏராளமான ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், சூரிக்குப் பதில் அளித்துள்ளார் சூர்யா.
"இன்னொரு நாயகனிடமிருந்து வாழ்த்து பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று சூர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகராகப் பெயரெடுத்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதை மறைமுகமாக குறிப்பிட்டே அவரை 'இன்னொரு நாயகன்' என்று தமது பதிலில் பதிவு செய்துள்ளார் சூர்யா.
இதற்கிடையே, 'ஜெய் பீம்' விவகாரம் தொடர்பாக அதன் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் என்ற வகையில் ஜோதிகா ஆகிய மூவர் மீது பாமக போலிசில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

